(எம்.வை.எம்.சியாம்)
சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சியிலிருந்த அனைத்து தரப்பினருமே இந்த நிலைக்கு நாட்டை கொண்டு வந்துள்ளனர். இன்று தலைதூக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு யார் பொறுப்புக் கூறுவது? ஆட்சியாளர்களை நாம் நிராகரிக்கின்றோம். தேர்தல் ஒன்றை நடத்தி திறமையானவர்களைக் கொண்டுவந்து வயோதிபர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமான தரப்பினரிடம் பொறுப்புகளை வழங்க வேண்டுமென மிஹிந்தலை மகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (01) அநுராதபுரத்திற்கு சென்று விசேட மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மிஹிந்தலை மகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரரை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சுதந்திரத்தின் பின்னர் நீங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருமே இந்த நிலைக்கு நாட்டை கொண்டு வந்துளீர்கள். இன்று தலைதூக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு யார் பொறுப்பு கூறுவது? என்பது தொடர்பில் கூறுங்கள் பார்ப்போம்.
பாராளுமன்றத்தில் சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது ஆளுங்கட்சியுமல்ல, எதிர்க்கட்சியுமல்ல. மக்களே மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பியுள்ளனர். எனவே நாட்டு மக்களை பாதுகாப்பது உங்கள் அனைவரினதும் பொறுப்பாகும்.
பிள்ளைகள் உயிரிழக்கின்றனர். சத்திர சிகிச்சை மூலம் உயிரிழக்கின்றனர். மருந்துகள் இல்லை. அதிகளவிலான வைத்தியர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர். இளைஞர், யுவதிகள் சென்றுள்ளனர். தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு எல்லாம் யார் பொறுப்பு கூறுவது என்று கூறுங்கள்?
முடியுமான அளவு திருடுகிறார்கள். இயன்றளவு தரகு பணம் பெற்றுக் கொள்கிறார்கள். மருந்து, முட்டை, நெல் உள்ளிட்ட அனைத்திலும் திருடுகிறார்கள். உங்களிடத்தில் இருக்கிறதா என்பது தொடர்பில் எனக்கு தெரியாது. அவர்களுக்கு மதுபானசாலைகள் இருக்கின்றன. இந்த அரசியல்வாதிகள் இணைந்து அழிவை மேற்கொள்கின்றனர். தற்போது மக்களிடத்தில் பழிவாங்குகிறார்கள்.
மேலும், ஜனநாயக ரீதியான மக்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது. ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது. தடிகளால் தாக்குகின்றனர். சிறையில் அடைக்கிறார்கள். 69 இலட்சம் மக்கள் வாக்களித்தார்கள் எனக் கூறுகிறார்கள். தற்போது 69 இலட்சம் இருக்கிறதா? என தெரியாது. மறுசீரமைப்பு என கைத்தட்டிக் கொண்டு நடனங்களை நடத்துவது அல்ல.
ஆட்சியாளர்களை நாம் நிராகரிக்கின்றோம். எனவே ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி திறமையானவர்களைக் கொண்டு வந்து வயோதிபர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியமான தரப்பினரிடம் பொறுப்புக்களை வழங்க வேண்டும்.
ஊழல், மோசடி, அற்ற கல்வி கற்ற 60 வயதுக்கு குறைந்த தரப்பினரை கொண்டு வந்து நீங்களும் 60 வயதுக்கு குறைந்தவர் அல்லவா? இதனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றார்.
No comments:
Post a Comment