எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றால் ஏன் மறுசீரமைக்க வேண்டும் : மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை - வாசுதேவ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Saturday, July 1, 2023

எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றால் ஏன் மறுசீரமைக்க வேண்டும் : மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை - வாசுதேவ நாணயக்கார

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியம் நாட்டை ஆட்சி செய்கிறது. எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றால் ஏன் தேசிய கடன்களை மறுசீரமைக்க வேண்டும். மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை. ஆகவே கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கணக்காளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மருதானையில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமையவே ஜனாதிபதி செயற்படுகிறார். கடுமையான நிபந்தனைகள் ஒட்டு மொத்த மக்களுக்கும் சாபமாக மாறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியமே நாட்டை தற்போது ஆட்சி செய்கிறது. தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த எந்தத் திட்டத்தையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவாதத்தை கொண்டு எவரிடமிருந்தும் கடன் பெறலாம் என்பது குறித்து மாத்திரமே அவதானம் செலுத்தப்படுகிறது.

தேசிய கடன்களை மறுசீரமைப்பதால் வங்கிக் கட்டமைப்பு, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று ஜனாதிபதி, மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றால் ஏன் தேசிய கடன்களை மறுசீரமைக்க வேண்டும்.

ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள சகல கடன்களும் தரவிறக்கம் செய்யப்படும் அதனை தொடர்ந்து புதிய பிணைமுறிகள் வழங்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகிறார்.

பிணைமுறிகளை புதிதாக விநியோகிக்க வேண்டுமாயின் நேரடி வட்டி வீதம் அதிகரிக்கப்பட வேண்டும். மீண்டும் வரி வீதம் அதிகரிக்கப்பட்டால் சமூக கட்டமைப்பில் ஒருபோதும் அமைதி நிலவாது.

நாட்டு மக்களின் உழைப்பை சூறையாடும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை உறுதிப்படுத்தும் தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்றார்.

No comments:

Post a Comment