நிர்மாணிக்கப்படும் 6 தொடர் மாடி குடியிருப்புத் தொகுதிகளில் 4074 பேரை குடியமர்த்துங்கள் : மக்களின் சமூக பாதுகாப்பு, வாழ்வாதார அம்சங்களில் விசேட கவனம் செலுத்த வேண்டும் - அமைச்சர் பிரசன்ன - News View

About Us

About Us

Breaking

Friday, July 14, 2023

நிர்மாணிக்கப்படும் 6 தொடர் மாடி குடியிருப்புத் தொகுதிகளில் 4074 பேரை குடியமர்த்துங்கள் : மக்களின் சமூக பாதுகாப்பு, வாழ்வாதார அம்சங்களில் விசேட கவனம் செலுத்த வேண்டும் - அமைச்சர் பிரசன்ன

கொழும்பு நகர மறுசீரமைப்புத் திட்டத்துடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் 6 வீட்டுத் தொகுதிகள் தொடர்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தப்படும் மக்களின் சமூக பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி போன்ற அம்சங்களில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அதற்காக அரச மற்றும் தனியார் துறையை இணைத்து வழிகாட்டுதல்களை வழங்குமாறும் அமைச்சர் தெரிவித்தார்.

மக்களை தொடர்மாடிகளில் குடியமர்த்தும் திட்டங்கள் தொடர்பில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறுவோரை குடியமர்த்துவதற்காகவே இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. அதற்கான நிதி உதவியை ஆசிய உள்கட்டமைப்பு பொது வசதிகள் அபிவிருத்தி வங்கி வழங்கும்.

கொழும்பகே மாவத்தை, ஸ்டேடியம்கம, ஆப்பிள்வத்த, பெர்குசன் வீதி, ஒபேசேகரபுர, மாதம்பிட்டிய ஆகிய பகுதிகளில் இந்த வீட்டுத் தொகுதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இந்த வீடுகளில் ஒன்று 550 சதுர அடியில் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வீடு மற்றும் சொத்துக்கான உரிமைப்பத்திரம், இலவச தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு, வருமான இழப்பு மற்றும் வாழ்வாதார இழப்புக்கான உதவித் தொகை, நிதி மற்றும் இதர உதவித்தொகைகள் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
கால்நடைகள் மற்றும் கோழிகளை வளர்க்கும் மக்களுக்கும் அவர்களது வாழ்வாதாரத்தை தொடர்வதற்கென குடியிருப்புகளுக்கு அண்மையில் சிறிது இடம் வழங்கப்பட வேண்டும். அப்படி இடங்கள் வழங்கப்படவில்லை‍யென்றால், மக்கள் அனாதரவாக இருப்பார்கள்.

பயிற்சித் திட்டங்கள், வாழ்வாதாரத் திட்டங்கள் போன்றவற்றை மக்களுக்காக நடைமுறைப்படுத்துவதுடன், திட்டத்தின் தோல்வியுற்ற பகுதிகளை அடையாளம் காண வேண்டும்.

அதற்காக கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், சமயத் தலைவர்கள், சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள், போக்குவரத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை இந்த ஆறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் நியமிக்க வேண்டும்.
அமைச்சு அதிகாரிகள் குழுவுடன் தொடர்ந்து கலந்தாலோசித்து அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் பிரச்சினைகளை அவர்களிடம் பரிந்துரைத்து, தீர்வு காண வேண்டும்.

தோல்வியடைந்த பகுதிகளை கண்டறிந்து, மக்களின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் சம்பந்தப்பட்ட திட்டத்தை மேலும் வெற்றியடையச் செய்ய முடியும்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வீட்டுரிமைப் பத்திரத்தை வழங்க வேண்டும்.

குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளை சுற்றிலும் பரவிவரும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் வகையில், அந்த குடியிருப்பில் வசிக்கும் இளைஞர்களை தொடர்புகொண்டு போதைப்பொருள் ஒழிப்புப் படையை உருவாக்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து, இக்கலந்துரையாடலில் பங்கேற்ற கொழும்பு-14, அசோக பௌத்த நிலையத்தின் விகாராதிபதி வண. இங்குருவத்தே விபாவிரதன தேரர் கூறுகையில், தற்போது மக்கள் குடியிருக்கும் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தீயணைப்பான் உள்ளிட்ட மின்சாதனங்கள் அகற்றப்பட்டுள்ளன. மின்தூக்கிகள் சேதமடைந்துள்ளன.

சில குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் குப்பைகளை நெடுஞ்சாலையில் வீசுகின்றனர். மக்களின் நலனுக்காக செயற்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்கள் அந்த மக்களாலேயே பாதிக்கப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது.

அத்தோடு, நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதால் குடியிருப்புகள் மாசடைகின்றன என தெரிவித்தார்.

மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை உட்பட மக்களுக்கு வீடுகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் இணைத்து வீடமைப்பு தொடர்பான தரவு அமைப்பை உருவாக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment