தென் பகுதியைச் சேர்ந்தவர் உயிரிழப்பு : வட மாகாணத்தில் 1843 பேர் டெங்கினால் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 4, 2023

தென் பகுதியைச் சேர்ந்தவர் உயிரிழப்பு : வட மாகாணத்தில் 1843 பேர் டெங்கினால் பாதிப்பு

வட மாகாணத்தில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என வடக்கு மாகாண மேலதிக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (04) வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் 1843 பேர் டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார்கள். இதுவரையில் தென் பகுதியில் இருந்து வந்த ஒருவர் மாத்திரம் டெங்கு தாக்கத்தினால் இறப்புக்கு உள்ளாகி இருக்கின்றார்.

இது தவிர வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் 1491 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 65 பேரும், மன்னார் மாவட்டத்தில் 77 பேரும், வவுனியா மாவட்டத்தில் 106 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 104 பேருமாக மொத்தமாக 1843 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. யாழ்ப்பாண நகரப்பகுதி, நல்லூர், கரவெட்டி பகுதிகளில் இந்த டெங்குத் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.

இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த டெங்குத் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் டெங்குத் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. ஏனைய நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

டெங்குத் தொற்றை குறைப்பதற்கு குறிப்பாக டெங்கு பரப்பும் நுளம்புகளை இல்லாது ஒழிக்க வேண்டும். அந்த நுளம்புகள் குறிப்பாக பல்வேறு இடங்களில் பெருகி அவை டெங்கு நோயைப் பரப்புவதனால் டெங்கு நோய்த் தாக்கமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் ஏற்படுகின்றது.

எனவே டெங்கு தொற்றினை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருந்து பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment