(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்கத்தின் தேசிய கடன் மறுசீரமைப்பின் மூலம் நாட்டின் தொழிலாளர்களின் பணத்தில் 12 ட்ரில்லியன் ரூபா குறைப்பு செய்யப்படுவதாக வெரிட்டே ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இது தொடர்பாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய அதிகாரிகள் எந்தவித ஆய்வும் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் சமூக பொருளாதார விரிசல் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் பாராளுமன்ற குழுக்களுக்கு சென்று நாட்டில் இருக்கும் பொருளாதார, சமூக பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல்கள் கேட்பதற்கான உரிமை எனக்கு இருக்கிறது.
அதேவேளை வெரிட்டே ஆய்வு நிறுவனம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில் தேசிய கடன் மறுசீரமைப்பின் மூலம் தொழிலாளர்களுக்கு ஏற்படப்போகும் நட்டம் 12 ட்ரில்லியன் ரூபா அதாவது 12 இலட்சம் கோடி ரூபா தொழிலாளர்களின் நிதி குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பும்போது, தொழிலாளர்களின் எந்தளவு தொகை குறைக்கப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
கடன் மறுசீரமைப்பின் மூலம் வேலை செய்யும் மக்களின் பணம் எந்தளவு குறைவடையும் என்பது தொடர்பாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய அதிகாரிகள் எந்தவித ஆய்வும் மேற்கொள்ளவில்லை.
ஆனால், எமது நாட்டின் தனியார் ஆய்வு நிறுவனமான வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 12 ட்ரில்லியன் ரூபா குறைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், பாராளுமன்ற செயற்குழுவுக்கு சென்று அது தொடர்பாக கேள்வி எழுப்புவதற்கு எனக்கு உரிமை இல்லையா என்றார்.
அதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், நீங்கள் தெரிவிக்கும் அதிகாரிகள் அனைவரையும் உங்கள் காரியாலயத்துக்கு அழைத்து கேள்வி கேட்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதனால் பாராளுமன்ற செயற்குழுவுக்கு செல்லாமல் தனிப்பட்ட ரீதியில் அவர்களை அழைத்து கேள்வி எழுப்பலாம் என்றார்.
அதற்கு சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், நீங்கள் உத்தரவிட்டதன் பிரகாரம், நான் செய்கிறேன். ஆனால், நிறைவேற்று ஜனாதிபதியின் ஆலோசனை கிடைத்து, அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது. அத்துடன் நான் அரச அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து, அவர்கள் வரவில்லை என்றால், அது எனது சிறப்புரிமை மீறும் நடவடிக்கையாகும். அந்த பொறுப்பை சபாநாயகர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment