அரச பல்கலைக்கழகங்களில் கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்றுள்ள பகிடிவதை சம்பவங்கள் மற்றும் அது தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தனித்தனியாக அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அது தொடர்பான அறிக்கைகளை 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கையெடுக்குமாறு அதற்கிணங்க அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள பகிடிவதை சம்பவத்தில் பாரிய பெகோ ரயர் புரண்டமையினால் முதலாம் ஆண்டில் கல்வி கற்ற மாணவரான பசிந்து ஹர்சன சில்வா பாரிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின்போதே உச்ச நீதிமன்றத்தினால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளான புவனேக அலுவிஹாரே, சிரான் குணவரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மேற்படி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் நீதிமன்றம் அதன் கவனத்தை செலுத்தியுள்ளது.
அதற்கிணங்க பகிடிவதையானது பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாரிய அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள பகிடிவதை சம்பவங்கள் மற்றும் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கள் சம்பந்தமாக விடயங்களை தேடுவது தொடர்பில் நீதிபதிகள் குழாமின் கவனம் செலுத்தப்பட்டது.
அதேபோன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் செயற்படும் 16 பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபரும் இந்த அடிப்படை உரிமை மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடுமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோன்று பகிடிவதை சம்பவங்களை இல்லாதொழிப்பதற்கு தேவையான கட்டளைகளை வெளியிடுவதற்கு தேவையேற்படின் அது தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் அத்தியாவசியமான தரப்பாக உள்ள நிலையில் அந்த அமைச்சரும் இந்த மனுவில் பிரதிவாதியாக பெயரிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலதிக விசாரணையை முன்னெடுப்பதற்காக மேற்படி வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment