மஹா விகாரை தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்து உண்மைக்கு புரம்பானது : தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் எந்த அறிவும் இல்லாமலேயே கலந்துரையாடலுக்கு சென்றிருக்கிறார் - குருந்து விஹாரை தலைமை தேரர் - News View

About Us

Add+Banner

Wednesday, June 14, 2023

demo-image

மஹா விகாரை தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்து உண்மைக்கு புரம்பானது : தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் எந்த அறிவும் இல்லாமலேயே கலந்துரையாடலுக்கு சென்றிருக்கிறார் - குருந்து விஹாரை தலைமை தேரர்

Kurunthoor-2-1024x576
(எம்.ஆர்.எம்.வசீம்)

மஹா விகாரையின் காணி பரப்பளவு தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்து உண்மைக்கு புரம்பானது. அதேநேரம் தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம் குருந்து விஹாரை தொடர்பாக எந்த அறிவும் இல்லாமலேயே ஜனாதிபதியுடன் கலந்துரையாடலுக்கு சென்றிருக்கிறார் என குருந்து விகாரை தலைமை தேரர் தெரிவித்தார்.

குருந்து விகாரை காணி தொடர்பாகவும் அங்கு தொல்பொருள் திணைக்களம் கைப்பற்றி இருக்கும் இடங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மற்றும் தொல்பொருள் திணைக்கள ஆணையாளர், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மஹா விகாரையை விட குருந்து விகாரை விசாலமானதா என ஜனாதிபதியின் கேள்விக்கு ஆணையாளருக்கு பதில் சொல்ல தெரியாமல் இருந்திருக்கிறது.

அவர் குருந்து விகாரை பிரச்சினை ஏற்பட்ட காலத்தில் இருந்து இந்த விகாரையின் பரப்பளவு தொடர்பாகவோ இங்குள்ள பிரச்சினை தொடர்பாகவோ சரியாக ஆராய்ந்து பார்க்கவில்லை.

குருந்து விகாரைக்கு அவர் வரும்போது தமி்ழ் மக்கள் பிரச்சினைப்படுத்துவார்களோ என அச்சத்துடனே இங்கு வந்து அவசரமாக சென்று விடுவார்.

அதனால் இந்த விகாரையின் காணி தொடர்பில் அவர் எந்த தயார் நிலையும் இல்லாமலே ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு சென்றிருக்கிறார்.

குருந்து விகாரையின் காணி தொடர்பில் தெரிவிப்பதாக இருந்தால், 1933 இல் வெள்ளையர் காலத்தில் குருந்து விகாரை தொல்பொருள் பாதுகாப்பு பிரதேசமாக 78 ஏக்கர் நிலப்பரப்பாக அளவிட்டிருந்தது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளின் பின்னர் இன்னும் பல தொல்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து வவுனியா தொல்பொருள் காரியாலயத்தினால் தொடர்ந்து பல வருடங்களாக மேற்கொண்ட ஆய்வின் பின்னரே புதிய தொல்பொருள் இருக்கும் பிரதேசங்களை கண்டுபிடிக்கப்பட்டு எல்லை தூண்கள் நாட்டப்பட்டதால் அந்த பிரதேசத்திவ் 229 ஏக்கர் இருப்பதாக அறிந்துகொள்ள முடிந்தது. அதன் பிரகாரம் மொத்தமாக தற்போது சுமார் 310 ஏக்கர் காணிப்பரப்பு குருந்து விகாரைக்கு இருக்கிறது.

அப்படியானால் ஜனாதிபதி தெரிவிப்பதுபோல் மஹா விகாரை 100 ஏக்கரும் இல்லையா? ருவன்வெலிசாய, தூபாராமய, தேத்தவனாராமய, ஸ்ரீமா போதி இந்த பகுதிகளை எடுத்துக் கொண்டாலும் 500 ஏக்கருக்கும் அதிகமாகும்.

அபயகிரி மற்றும் மற்ற இடங்களை எடுத்துக் கொண்டால் மஹா விகாரைக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி இருக்கிறது. அதனால் ஜனாதிபதிக்கு இது தொடர்பாக வாசிக்கவும் தெரியாது. அதனை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்கு தொல்பொருள் ஆணையாளர் நாயகத்துக்கும் தெரியாது.

மேலும் அந்த பிரதேசத்தில் 100 வருடங்களுக்கும் அதிக காலம் வயல் வேலை செய்ததாக சுமதந்திரன் எம்.பி தெரிவித்திருந்தார். அது அப்பட்டமான பொய். யுத்தத்துக்கு பின்னர் குருந்து விகாரையை சுற்றியுள்ள 50 ஏக்கருக்கும் அதிக காணியில் காடு அழிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அண்மைக்காலத்தில் அந்த பிரதேசத்தில் காடு அழிக்கப்பட்டு வயல் வேலை செய்யப்பட்டு வந்தது. அந்த பிரதேசத்தை வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் தடை செய்திருந்தது. தடையை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் தமிழ் மக்களுக்கு விவசாயம் செய்ய அந்த பிரதேசத்தில் காணி வழங்க வேண்டும் என்றிருந்தால், தொல்பொருள் இல்லாத இன்னும் 6 ஆயிரம் ஏக்கர் காணி அந்த இடத்தில் இருக்கிறது. அதில் இருந்து வழங்க முடியும். அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் தொல்பொருள் இருக்கும் இடங்களை வழங்க அனுமதிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *