மீண்டும் நீடிக்கப்பட்டது நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 6, 2023

மீண்டும் நீடிக்கப்பட்டது நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழு

(நா.தனுஜா)

நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த ஆணை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜுலை மாதம் முதலாம் வாரத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச் செய்தல் ஆகியவற்றுக்காக உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ்நகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரடங்கிய ஆணைக்குழு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

அந்த ஜனாதிபதி ஆணைக்குழுக்கு வழங்கப்பட்டிருந்த ஆணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்குவந்த நிலையில், அதன் இறுதி அறிக்கை டிசம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அந்த ஆணைக்குழுவுக்கான ஆணை இவ்வாண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு, பின்னர் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது ஜனாதிபதியினால் அந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த ஆணை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை முழுமையாகத் தயார் செய்யப்பட்டிருப்பதாக அறியமுடிவதுடன் அது இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத சில காரணங்களின் விளைவாக அவ்வறிக்கை ஜுலை மாத முதல் வாரத்தில் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை கடந்த வாரம் நீதியரசர் நவாஸ் தலைமையில் ஆணையாளர்களின் பங்கேற்புடனான கூட்டமொன்று நடைபெற்றதுடன், இதன்போது இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படவேண்டிய பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, அவைகுறித்து ஏகமனதாக இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment