தேர்தல்கள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வியாழக்கிழமை (29) புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துறைசார் நிபுணத்தும் கொண்டவர்களுக்கு மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி. தெஹிதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய உறுப்பினர்களாக நிமலசேன கார்தியா புந்திஹேவா, தையமுத்து தனராஜ், பேராசிரியர் பர்சானா பாத்திமா மற்றும் கலாநிதி தினுக் குணத்திலக்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய உறுப்பினர்களாக எம்.ஏ.பத்மசிறி சந்திரவன்ச பெரேரா மற்றும் அமீர் மொஹமட் பாயிஸ் உள்ளிட்டவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரிசயலமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக் காலம் நிறைவடையும். எனினும் புதிய அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.
எனினும் தற்போது தேர்தல் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையால் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment