வைப்பாளர்களின் 57 மில்லியன் கணக்குகள் பாதுகாக்கப்படும் : ஊழியர் சேமலாப நிதியங்கள் மீது கைவைக்கப் போவதில்லை - இலங்கை மத்திய வங்கி ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 29, 2023

வைப்பாளர்களின் 57 மில்லியன் கணக்குகள் பாதுகாக்கப்படும் : ஊழியர் சேமலாப நிதியங்கள் மீது கைவைக்கப் போவதில்லை - இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என்றும், வங்கிக் கணக்கு வைப்பாளர்களின் 57 மில்லியன் வங்கிக் கணக்குகளையும் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

நாட்டின் வங்கித் துறையில் சரிவு ஏற்பட்டால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதால் வங்கித் துறையைப் பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியமானது என்பதோடு, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ளும் வரையில் பணப்புழக்கம் தொடர்பிலான ஊகங்களை தடுப்பதற்காகவே வெள்ளிக்கிழமை (30) வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது கைவைக்கும் எண்ணம் இல்லையென உறுதியளிக்கும் மத்திய வங்கி ஆளுநர், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு குறைந்தபட்சம் 9% வட்டி வீதத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று (29) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்கள, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, திறைசேரியின் செயலாளர் ஏ.கே.செனவிரத்ன ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ”அரசாங்கத்தின் கடன்களை நிலையான தன்மைக்கு கொண்டு வர வேண்டுமெனில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாடுகளுக்கமைய 10 வருடங்களுக்குள் ஒரளவு ஸ்திரமான தன்மையை பேண வேண்டியது அவசியமாகும்.

உதாரணமாக கூறுவதாயின் 2022 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மொத்த தேசிய உற்பத்தி வீதம் 128 ஆக பதிவாகியது. இருப்பினும் 2032 ஆம் ஆண்டில் 95 சதவீதமென்ற குறைந்த சதவீதத்திற்கு கொண்டு வர வேண்டியிருந்தது. அதுவே முதலாவது அளவுகோலாகும். அடுத்தாக அரசாங்கத்தின் வருடாந்த நிதிசார் தேவைகள் தற்போது 34.6% சதவீமாக காணப்படுகின்ற நிலையில் 2027 - 2032 வரையான ஐந்து வருடங்களில் 13% சதவீதம் அல்லது அதற்கு குறைந்த மட்டத்திற்கு கொண்டு வர வேண்டியது அவசியமெனவும் மூன்றாவது அளவுகோலாக தற்போது 9.4 % ஆக காணப்படும் வெளிநாட்டு கடன் சேவைகளை 2027 - 2032 வரையான காலப்பகுதியில் 4.5% சதவீமாக வரையறுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.

மேற்படி இலக்குகளை அடைந்துவிட்டால் மேலதிக நிதி இடைவெளி (external financing gap) இனை நிரப்புவதற்கான சலுகையாக 16.9 அமெரிக்க டொலர்கள் குறைவடையும். குறித்த இலக்குகளின் நிறைவில் மேலும் மூன்று விடயங்களை சாத்தியமாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதற்காக முதலில் உத்தியோகபூர்வமான கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அது தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்ற வருகின்றன. அடுத்ததாக வணிக ரீதியில் தனியார் பிணைமுறிகளாக பெற்றுக் கொண்ட பணம், அது தொடர்பிலும் கலந்துரையாடப்படுகிறது. மூன்றாவதாக உள்நாட்டு கடன்கள் ஓரளவு மறுசீரமைப்புச் செய்தல் உள்ளிட்ட முயற்சிகள் ஊடாக கடன் நீடிப்புக்களை மேற்கொள்ள முடியும்.

உள்நாட்டு கடன் மறுசீuமைப்பின்போது அரசின் மொத்த நிதித் தேவைக்காக (Gross Financial need) பெறப்படும் கடன்களை குறைப்பது அவசியமாகும். அதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகளை செயற்படுத்தினால் 12.7 சதவீத்தினால் குறைத்துக் கொள்ள முடியும். 13 ஐ விடவும் குறைந்த மட்டத்தில் அதனை பேண வேண்டும். அதனை சரியாக செயற்படுத்தினால் மூன்று தசம் அளவிலான இடைவெளியொன்றும் உருவாகும். இதனை சரியாக செயற்படுத்தினால் மொத்த தேசிய உற்பத்தி விகிதத்தின் கடன் தொகை சதவீத அடிப்படையில் 90% ஆக குறைவடையும்.

தற்போது திறைசேரியின் கடன் பத்திரங்கள் 4.1 டிரில்லியன்களாக காணப்படுகின்றது. அவற்றில் 62.4% மத்திய வங்கியிடமே உள்ளது. நாம் அறிந்த வகையில் திறைசேரியின் கடன் பத்திரங்களை நீடிக்கப்பட்ட திறைசேரி பிணைமுறிகளாக மாற்றுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. அது போதுமானதல்ல என்பதால் மிகுதி தொகையை பெற்றுக் கொள்வதற்காக நாம் திறைசேரி பிணைமுறிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

தற்போது 8.7 டிரில்லியன்கள் பெறுமதியான திறைசேரி பிணைமுறிகள் காணப்படுகின்றன. 36.5% (superannuation fund) இலும் 36% சதவீதமானவை வங்கிகளிலும் காணப்படுகின்றன. ஏனைய பகுதிகள் காப்புறுதி மற்றும் தனியார் நிறுவனங்களிடத்தில் உள்ளன.

இங்கு மத்திய வங்கி கட்டமைப்பு மற்றும் EPF ஆகியவற்றை பாதுகாக்க முயற்சிக்கின்ற அதேநேரம் ஊழியர் சேமலாப நிதியத்தின் பொறுப்பாளராகவும் மத்திய வங்கியே செயற்படுகின்றது.

அந்த நிலைப்பாட்டிலிருந்தே மத்திய வங்கி இந்த விடயத்தில் தலையீடு செய்கிறது. அதற்கமைய மக்களின் வைப்புக் கணக்குகள் மற்றும் EPF போன் பொது நிதியங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே மத்திய வங்கி மேற்படி செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு இணங்கிச் செயற்படுகின்றது.

இந்த யோசனைகளில் அடிப்படையில் பார்க்கின்றபோது வங்கிகள் தற்போதும் அரசாங்கதின் கடன் சுமைகளை குறைப்பதற்கு அவசியமான பெரும் பங்களிப்பினை வழங்கியுள்ளன. குறிப்பாக தற்போது 50 சதவீத்திற்கும் அதிகமான வரிகளை வங்கிகளே செலுத்துகின்றன. அவற்றில் 30% நிறுவன வரியாகவும், 18% சதவீதம் நிதிச் சேவை வரியாகவும், 2.5% சமூக பாதுகாப்பிற்கான உதவியாகவும் வழங்கப்படுகின்றது.

அதற்கமைய தற்போதும் வங்கிகளின் வருமானத்தில் 50% சதவீத்தை அரசாங்கத்திற்கு செலுத்தி பங்களிப்பினை வழங்கி வருகின்றன. அதற்கு நிகராக (superannuation fund) நிதியங்கள் 14% வீதம் என்ற குறைந்த மட்டத்திலேயே வரிகளை அறவிடுகின்றன.

அதன்படி முதலாவது விடயத்திற்கு வங்கிக் கட்டமைப்பிடமிருந்து தற்போதும் ஒத்துழைப்பு கிடைக்கிறது. இரண்டாவது விடயம், கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக கடனை செலுத்துவதில் வங்கிகள் சிரமத்தை எதிர்கொண்டிருந்தன. மேலும் வழங்கப்பட்ட சலுகை காலங்களின்படி, கடன்களை மீளச் செலுத்தாமையினால் டிரில்லியன் கணக்கிலான நட்டத்தையும் எதிர்கொண்டுள்ளன. அத்தோடு கடந்த காலங்களில் 1.6 டிரில்லியன்கள் பெறுமதியான சலுகை காலத்தை வழங்கியுள்ள நிலையில் தற்போதும் வங்கி கட்டமைப்பினால் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு கிடைக்கின்றது.

அதேபோல் வங்கி கட்டமைப்புக்களை பாதுகாத்தல் மற்றும் வைப்பாளர்களின் பணத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு பாதுகாத்தல் என்பன முதன்மை பொறுப்புக்களாகும். அவர்களும் வரியின் ஊடாக பொருளாதாரத்திற்கும் திறைசேரிக்கும் பெருமளவான பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர்.

வங்கிகளுக்குள் காணப்படும் கணக்கு வைப்பாளர்களின் கணக்குகளின் எண்ணிக்கை 57 மில்லியன்களாக காணப்படுகின்றது. நாட்டிலிருப்பது 20 மில்லியன் மக்கள் தொகையாக உள்ளபோதும் 57 மில்லியன் வங்கிக் கணக்குகள் காணப்படுகின்றன. அந்த நிதிக்கு பாதிப்பு ஏற்படுமாயின் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மத்திய வங்கி என்ற வகையில் வங்கிக் கட்டமைப்பை பாதுகாப்பதையே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. கடந்த காலங்களில் வங்கிகள் முடங்கப் போவதாக போலி பிரசாரங்கள் பரவியன. அதனால் வைப்புக்கள் இல்லாமல் போய்விடும் என்றும் கூறப்பட்டது. அதனால் பலரும் வைப்புக்களை மீளப் பெற முற்பட்டனர். வங்கிக் கணக்குகளை மீளப்பெற்றால் முழுப் பொருளாதாரமும் சரிவடையும்.

அதனால் மக்கள் வைப்புக்களை பாதுகாப்பதோடு 57 மில்லியன் வங்கிக் கணக்குகளையும் பாதுகாக்கும் செயற்பாட்டிற்கே முன்னுரிமை அளிக்கப்படும். அதுவே மிகப்பெரிய சமூக சிக்கலாகும். அதனால் வங்கிக் கணக்குகள் மீது கைவைக்கும் எண்ணம் இல்லை.

அதனையடுத்து ஓய்வூதிய நிதியங்களை எடுத்துக் கொண்டால் 14% க்கும் குறைவான வரிக்கு உட்பட்ட ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளன. இவர்களிடத்திலுள்ள அனைத்து பிணைமுறிகளையும் மீளப் பெற்றுக் கொண்டு அரசாங்கத்தினால் புதிய பிணைமுறிகள் விநியோகிக்கப்படும். அவற்றுக்கு 2025 வரையில் 12% சதவீத வட்டியும் கிடைக்கும். அதன் பின்னர் 9% சதவீத வட்டி பெற்றுக் கொடுக்கப்படும். அதனால் ஊழியர் சேமலாப நிதியின் அளவு குறைக்கப்படாது. எதிர்காலத்தில் 9% சதவீத வட்டி கிடைக்கும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தும்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வட்டி வீதம் குறைவென நினைப்பவர்கள் திறைசேரியின் வெற்றிடத்தை நிரப்புதற்கான மேற்படி திறைசேரி பிணைமுறியில் பங்கெடுக்க விரும்பாதவர்களுக்கு மற்றுமொரு தெரிவும் உள்ளது. அதன்படி 14% வீதத்திற்கு மாறாக பொதுமக்கள் செலுத்தும் 30% சதவீத வரியை செலுத்த வேண்டியிருக்கும். அதன்படி சில வாரங்களில் பிணைமுறி பரிமாற்றத்தை நிறைவு செய்து ஜூலை மாதத்திற்குள் அந்தச் செயற்பாடுகளை முழுமைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, “தற்போது உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான யோசனை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. இதனை அரச நிநிக் குழுவில் சமர்பித்த பின்னர் வரும் சனிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதியை பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் கடன்களை மறுசீரமைக்க வேண்டியது அவசியமாகும். தற்போதும் இலங்கையில் கடன் நிலைத்தன்மை இல்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்ச்சியான நடவடிக்கைளின்போது அரசாங்க கடனை மறுசீரமைக்க வேண்டியது அத்தியாவசியமாகும். அதன் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள் என்ற இரு பகுதிகள் உள்ளன.

அதேபோல் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை அளித்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்தை விரைந்து முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.“ என்று நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, “சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் பெற்றுக் கொள்ள தீர்மானித்தைத் தொடர்ந்து கடந்த செப்டெம்பர் மாதமளவில் நிறைவேற்றுக் குழு மட்டத்திலான இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு நாம் முயற்சித்தோம். எவ்வாறாயினும் இலங்கை கடன் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் வரையில் அந்த யோசனைக்கு அனுமதி அளிக்க முடியாதென சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது.

அதற்கமைய செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மார்ச் 20 ஆம் திகதி வரையில் அரசாங்கம் மற்றும் சர்வதேச கடன் வழங்குநர்களுக்கிடையில் நிதிசார் உறுதிப்பாட்டினை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

எவ்வாறாயினும் மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் அதனை நாம் சாத்தியமாக்கிக் கொண்டோம். அதற்கமைய மார்ச் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் எமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்த பின்னர் 04 ஆண்டுகளுக்கான திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்திருந்தோம்.

இதில் 05 பிரதான பிரிவுகள் காணப்பட்டன. முதலாவதாக வருவாய் அடிப்படையிலான பொது நிதி ஒருங்கிணைப்பு என்ற விடயம் குறிப்பிடப்பட்டது. 2020 - 2021 வருடங்களில் இந்நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 8% சதவீமாக குறைந்து காணப்பட்டது. அந்த நிலையிலிருந்து மீள்வதற்கான பல காரணங்களும் அதனில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இரண்டாவது காரணியாக இலங்கையின் கடன் நிலைத் தன்மை இலங்கையில் இல்லை என்பதை நீண்ட காலத்திற்கு முன்பாகவே சர்வதேச நாணய நிதியம் கூறியிருந்த நிலையில், அடுத்ததாக நிலையான விலைவாசிகள் காணப்படும் நிலையை நாட்டிற்குள் உருவாக்குவதாகும்.

நான்காவதாக நிதித்துறையின் நிலைத் தன்மையை பாதுகாக்க வேண்டும் என்றும் ஐந்தாவது விடயமாக ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டம் ஆகியவற்றிற்குள் அரசாங்கம் பிரவேசிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த இலக்குகளை அடைய சூட்சுமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

இவற்றில் கடன் மறுசீரமைப்பு தவிர்ந்த அனைத்து விடயங்களும் அரச கொள்கையின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தற்போது நாம் பேசுகின்ற 42.1 பில்லியன் டொலர் அளவிலான உள்நாட்டு கடன்களில் 19.8 பில்லியன் மாத்திரமே மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளது. அதற்கு மத்திய வங்கி, வணிக வங்கிகள் மற்றும் ஏனைய வங்கிகள், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் அரசாங்கத்திற்கு கடன் வழங்கியுள்ள 04 நிறுவனங்கள் உள்வாங்கப்படும்.

இந்த நிறுவனங்களின் வாயிலான மறுசீரமைப்பு முயற்சிகளை கலப்பு முறையில் மேற்கொள்வதன் பலனாக அரசாங்கத்திற்கு குறிப்பிட்ட பலன்கள் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ” என்று கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்தார்.

மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்

கேள்வி
ஊழியர் சேமலாப நிதியம் பற்றிய பல்வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. திறைசேரி பத்திர முறைமைகள் அல்லது பரிந்துரைக்கப்பட்டுள்ள 30% சதவீத வரி முறைமைகளின் ஊடாக இறுதியில் கிடைக்கும் பணத்திற்கு என்ன ஆகும் ?

பதில் : மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க
“தற்போது பயனாளிகளுக்கு கிடைக்கும்” தொகை மாற்றம் இல்லாமல் அவ்வண்ணமே கிடைக்கும். முதலீடு செய்வதால் கிடைக்கும் 9% வட்டியும் கட்டாயமாக கிடைக்கும். அதனால் தற்போதைய நிலைக்கும் எதிர்கால நிலைமைகளிலும் மாற்றம் இருக்காது. ஆனால் 30 சதவீத வரியை செலுத்தாவிடின் 9% சதவீதத்தினையும் செலுத்த முடியாமல் போகும். அவ்வாறான நேரங்களில் 7 அல்லது 8 சதவீத வட்டியே கிடைக்கும்.

அதன்போது ஊழியர் சேமலாப நிதியத்தின் பயனாளர்களுக்கு வழங்கக்கூடிய சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் 9% வட்டியை செலுத்த முடியும் என நான் நம்புகிறேன். அதேபோல் நிதியத்திற்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது.

கேள்வி
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள எண்ணங்களை மாற்ற முடியாது. அதனால் சரியான தகவல்களை சமூகத்திற்கு வழங்குவதற்கான திட்டம் உள்ளதா?

பதில் : நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன
இன்று நாம் செய்வதும் அதனைத்தான். எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பலர் கேட்கிறார்கள். வங்கிகள் முடங்கிவிடுமா என்பதை போன்ற பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது கடினமான நிலைமையாகும். இன்று நாடு நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. அந்த சவால் இன்றும் முற்றுப்பெறவில்லை. நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்க இவ்வாறான வேலைத்திட்டங்கள் அவசியம்.

வங்கிகளை போன்றே ஊழியர் சேமலாப நிதியத்தையும் நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இவை அனைத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையிலேயே நாட்டை மேம்படுத்த வேண்டும்.

இந்த வேலைத்திட்டம் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துவோம். கிராம மக்களுக்கே இது பற்றிய தகவல்கள் சென்றடைய வேண்டும். வறிய மக்கள் இது பற்றி அறிய வேண்டும். அதேபோல் உள்நாட்டு கடனை மறுசீரமைக்கத் தவறினால் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்க முடியாமல் போதும். தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். நாம் கடன் மறுசீரமைப்புக்களை செய்யாவிட்டால் மேற்படிச் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும். அவ்வாறு நடந்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குரியாகிவிடும்.

கேள்வி
இலங்கையில் கடன் நிலைத் தன்மை இல்லை என்பது பல வருடங்களாக பேசப்படும் விடயமாகும். அதனால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எதற்காக அதிகளவில் பிணைமுறிகள் விநியோகிக்கப்பட்டன என்ற பிரச்சினையும் உருவாகின்றதே?

பதில் : மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க
இலங்கையில் கடன் நிலைத் தன்மை இல்லை என்பதை சர்வதேச நாணய நிதியமும் 2020 ஆம் ஆண்டிலேயே கூறியது. கடன் மறுசீரமைப்பு என்ற விடயம் 2021 ஆம் ஆண்டில்தான் பேசப்பட்டது.

அடுத்தாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு சேகரிக்கப்படும் பணம் நாட்டின் முதலீட்டின் பக்கமாக பார்க்கின்ற போது எவ்வாறு முதலீடு செய்யப்பட வேண்டும் என்ற கேள்வியும் காணப்படுகின்றது. வருடாந்தம் 500 மில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதியத்திற்கு கிடைக்கின்றன. ஊழியர் சேமலாப நிதியம் மட்டுமின்றி காப்புறுதி நிதியத்தின் பணத்தையும் இலங்கையிலேயே முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறானதொரு பாரிய தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சாத்தியமற்றது. அரசாங்கத்தினால் கடன் செலுத்த முடியாமல் போகின்ற போது திறைசேரி பத்திரங்களை பயப்படுத்த நேரிடும். அதுவே இறுதியில் நடக்கும்.

கேள்வி
ஊழியர் ஒருவர் ஓய்வுபெற்றுச் செல்லும் போது ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக்கொள்ள முடியுமா?

பதில் : மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க
ஆம். அது பற்றிய சந்தேகங்கள் அவசியமற்றது. காலம் முடிந்தவுடன் சேமலாப நிதியை பெற்றுக்கொள்ளும் இயலுமை பயனாளர்களுக்கு உள்ளது.

No comments:

Post a Comment