முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை தீர்த்து வைக்கும் பொதுவான வரைபைத் தயாரிக்கும் தருணம் வந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இதுபற்றித் தெரிவித்துள்ளதாவது, சிறுபான்மையினர், இனியும் தனித்தனியாகச் செயற்பட்டு சமூக உரிமைகளை வெல்ல முடியாது. சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு ஜனாதிபதி முனைப்புடன் செயற்படுவதை, நான் அறிவேன்.
இழக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெறவும் அதனுடன் தொடர்புடைய ஏனைய பிரச்சினைகள் குறித்தும் பொதுவான வரைபை தயாரிக்க வேண்டியுள்ளது.
வடக்கு, கிழக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பறிபோன முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களை மீளப் பெற வேண்டியும் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 வீத முஸ்லிம்கள் வாழ்கின்ற நிலையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேச செயலகங்களில் 1.3 வீத காணிகளே வழங்கப்பட்டுள்ளன. அம்பாறை, திருகோணமலை மற்றும் வடக்கின் ஏனைய பகுதிகளிலும் இதே நிலைமையே காணப்படுகிறது.
எல்லை நிர்ணய அறிக்கையில் சந்தேகங்கள், பாரிய ஆபத்துகள் காணப்படுகின்றன. முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்கள் தொடர்பில் சமூக பிரதிநிதிகளிடம் ஒருமித்த கருத்து நிலவுவது அவசியம்.
கருத்தொற்றுமையுடனும் போதிய ஆவணங்களுடனும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக சகல முஸ்லிம் தலைமைகளும் எம்பிக்களும் தங்களது அரசியல் பேதங்களைப் புறந்தள்ளி ஒன்றுபடல் அவசியம்.
ஒரே தாய்மொழியினராகிய தமிழரும் முஸ்லிம்களும் தொடர்ந்தும் பிணக்குகளுக்குள் சிக்கியிருப்பது சிறுபான்மை சமூகங்களை ஈடேற்றாது. என்றும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment