புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களவெளி பிரதேசத்தில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட நால்வர் காயமடைந்து, சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வேன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில், 107ஆம் மைல்கல் பகுதியில் வீதியோரத்திலுள்ள மரங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது, வானின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென, சிலாபம் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவர் கபில மல்லவாராச்சி தெரிவித்தார்.
விபத்து காரணமாக முன்னாள் இராஜாங்க அமைச்சரின் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஒருவர் குணமடைந்து இன்று பிற்பகல் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment