(இராஜதுரை ஹஷான்)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறந்த தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். அரசியல் இலாபத்தை கருத்தில் கொண்டு தொல்பொருள் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க இடமளிக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தோற்றம் பெற்றுள்ள மாறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஜனாதிபதி தலைமையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது தொல்பொருள் விவகாரம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளோம்.
பௌத்த மதத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அந்த பொறுப்பில் இருந்து எவரும் விலக முடியாது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் சின்னங்களை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் அரசியல் செய்கிறார்கள்.
சாதாரண மக்கள் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதபோதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.
குறுகிய அரசியல் இலாபத்தை முன்னிலைப்படுத்தி தொல்பொருள் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க இடமளிக்க முடியாது.
குருந்தூர் மலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்பதை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்துகிறோம்.
குருந்தூர் மலை விவகாரத்தில் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுவது அத்தியாவசியமானது.
அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். இவ்விடயம் தொடர்பில் சகல தொழிற்சங்கங்களுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment