அன்றாடம் வரி அறவீட்டின்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட பரிந்துரைகளை ஜனாதிபதியின் அனுமதிக்காக விரைவில் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாபிட்டிய தெரிவித்தார்.
அதில் வரி அறவீடு தொடர்பிலான நடைமுறைப் பிரச்சினைகளை நிவர்த்தித்தல் தொடர்பிலான விசேட பரிந்துரைகளை உள்ளடங்கியிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார அடிப்படையில் பார்க்கையில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டியது முக்கிய விடயமாகும் என்றும் வருமான அதிகரிப்பின்போது வரி அறவீடுகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகும் எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதும் வரி செலுத்தாமல் இருக்கின்ற மதுபான வகைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிலவற்றுக்கு 14 தினங்களுக்கு வரிப் பணத்தை செலுத்தி முடிக்குமாறு விசேட கட்டளை ஒன்று விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதும் நாட்டில் சுயமாக வரிச் செலுத்தும் முறைமை ஒன்றே காணப்படுவதாகவும் அதனை மிக விரைவாக மாற்றியமைக்க வேண்டியது அவசியமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், 2022 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியுடன் ஒப்பிட்டு பார்கின்றபோது வரி வருமானம் மிகக்குறைந்த அளவில் காணப்படும் ஒரு நாடாகவே இலங்கை விளங்கியது. வரி வருமானம் 7.3% ஆக காணப்பட்டபோது அரச செலவு 19 - 20% சதவீதமாக காணப்பட்டது.
அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதில் வரி சேகரிப்பு முக்கியமான காரணியாகும். வரி அதிகரிப்பினால் மாத்திரமே அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் முடியும். எவ்வாறாயினும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வரி சேகரிப்பது இலகுவானது அல்ல. எவ்வாறாயினும் தற்போது வரி அறவீட்டுச் செயற்பாடுகள் மகிழ்ச்சிகரமான நிலையில் காணப்படுகின்றன. நாட்டின் நலன்கருதி சுயமாக வரி செலுத்திய மக்களுக்கு நன்றி. அவர்கள் ஓரளவிற்கு அரசாங்கத்தின் தேவையை புரிந்து கொண்டுள்ளனர்.
2022 வருடத்தின் 7.3% சதவீதமாக காணப்பட்ட அரசாங்கத்தின் வரி வருமானம் 2023 இன் முதல் காலாண்டில் 15.8% ஆக உயர்வடைந்துள்ளமை ஒரு மைல்கல் இலக்காகும். பொதுவார அரசாங்கம் நேரடியான வரி அதிகரிப்பை மேற்கொள்ளவே விரும்புகிறது. அதேபோல் தற்போதைய வரி வருமானத்தை சீராக பேணிச் செல்வது மாத்திரமே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளமையினால் புதிய வரிகளை அறவிடும் எதிர்பார்ப்புக்கள் அரசிடம் இல்லை.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் முடிந்த அளவில் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. வங்கிக் கடன் அதிகரிப்பு தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் அரச வங்கிகளின் வட்டி வீதம் 2.5% சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. மக்களிடத்திலிருந்து வரி சேகரிக்கப்படும்போது அதற்கு இணையான வகையில் சலுகைகளை பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
தற்போதும் 3 இலட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்துகின்றனர். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு 10 இலட்சம் வரி ஆவணங்களாவது பேணப்பட வேண்டும். அதனை சரிவர செய்யும் பட்சத்தில் நாட்டின் ஒரு தொகுதி மக்கள் மீது மாத்திரம் சாட்டப்பட்டுள்ள வரிச் சுமையை மட்டுப்படுத்தலாம். வரி செலுத்துவதால் அரசாங்கத்துடனான நல்லதொரு தொடர்பாடல் உருவாகும். தனித்துவமான 14 கல்வியறிவுள்ள குழுக்களுக்காக வரிப் பத்திரங்கள் திறக்கப்படவுள்ளன. வரி செலுத்துபவர்களே நாட்டின் வலுவான பிரஜைகளாவர்.
அதேபோல் அரசாங்கம் மக்களிடத்திலிருந்து சேகரிக்கப்படும் வரிப் பணத்தை உரிய முறையில் செலவிடுவதில்லை. வரிப் பணத்தை செலவிட்ட விதம் தொடர்பில் 6 சுற்றுநிருபங்கள் வாயிலாக அறிந்துகொண்ட முடிந்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தைப்போன்று சீரான முறையில் எந்த ஒரு அரசாங்கமும் வரி வருமானத்தை முகாமைத்துவம் செய்திருக்கவில்லை. அதனால் அரசாங்கம் பொதுமக்களின் பணத்தை சிறந்த முறையில் பாதுகாக்கும்.
உதாரணமாக அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உரியவர்களுக்கு மாத்திரம் சலுகைகளை பெற்றுக் கொடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது. அதற்கான தரவுகளை வழங்குவோர் உண்மையான தரவுகளை வழங்க முடியும். தகவல் பெறுகின்றவரும் உண்மையான தகவல்களை பெற்றுக் கொள்ள கடமைப் பட்டுள்ளார். இவ்வாறான விடயங்களை பலரும் விரும்புவதில்லை. பல்வேறு நெருக்கடிகள் மற்றும் அவதூறுகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் உரியவர்களுக்கு சலுகைகளை வழங்கவே முயற்சிக்கிறது. அரசியல் தொடர்புகளை கருத்திற் கொண்டு சலுகை வழங்கும் செயற்பாடுகள் இனிவரும் நாட்களில் முன்னெடுக்கப்படாது.
தற்போது நாட்டில் வரி செலுத்தாமல் இருக்கின்றவர்களிடத்தில் வரி அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எமது நாட்டில் இருப்பது சுய விருப்பத்தின் பேரில் வரி செலுத்தும் முறைமையாகும்.
உதாரணமாக ஒருவருடைய வருமானம் யாதென அரசாங்கம் கேட்டறிந்த பின்னர் அரசாங்கமே வரி அறவீட்டினை தீர்மானிக்கின்றது. வரி சேகரிக்கச் செல்லும்போது சிலர் நீதிமன்றத்திற்கு செல்கின்றனர். அவ்வாறான நேரங்களில் வருடக் கணக்கில் நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும். பெருமளவான வழக்குகள் இன்றும் நிறைவடையாமலேயே உள்ளன. இவ்வாறான பல நடைமுறைப் பிரச்சினைகள் வரி அறவீட்டில் உள்ளது .
வரி அறவீட்டிற்கான விசேட முறைமைகள் அடங்கிய யோசனைகள் அடங்கிய தொகுப்பொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதிக்காக வழங்கவுள்ளோம். அதில் மேற்படி பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான விசேட நீதிமன்றம் பற்றிய விடயங்களும் உள்ளடங்கியுள்ளன. தற்போதும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கான உற்பத்தி வரி 20 சதவீத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் வரி செலுத்துவதில்லை. 14 நாட்களில் அவற்றை செலுத்துமாறு விசேட கட்டளை ஒன்றும் பிரப்பிக்கப்பட்டுள்ளது.
நமது நாடு 83 பில்லியன் டொலர்கள் கடன்பட்டுள்ளது. அதில் 41 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டுக் கடனாகவும், 42 பில்லியன் டொலர்கள் உள்நாட்டு கடனாகவும் காணப்படுகின்றன. ஒரு நாடு என்ற வகையில் ஸ்திரமான சூழ்நிலையை உருவாக்க ஒவ்வொருவரும் சில அர்ப்பணிப்புக்களை செய்ய வேண்டும். அதற்கான முறைமைகள் பற்றியும் எதிர்காலத்தில் ஆராயலாம். எவ்வாறாயினும் தற்போது வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெறுவதற்கு சென்றபோது எத்தனை பேர் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். சரியான முறையில் முகாமைத்துவச் செயற்பாடுகளை சீர்படுத்துவதற்காகவே வங்கிகள் சில தினங்களுக்கு மூடப்படவுள்ளன. அதனால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது.
தற்போது அஸ்வெசும திட்டத்தை குழப்பி சிலர் நாட்டை முடக்க பார்க்கிறார்கள். பாரம்பரிய எதிர்கட்சிகளின் கொள்கைகளுடன் மோத வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை சாதாரண நாடாகும். இங்கு எவரேனும் சூழ்ச்சி செய்ய முற்பட்டால் நல்ல பலன்களை நாம் அடைய முடியாது. அதனால் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைபோடுவதற்கு மாத்திரமே முடியும். எவ்வாறாயினும் அரசாங்கம் தூரநோக்குடனேயே செயற்படுகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment