பாண் கட்டளைச் சட்டம் இரத்து : தேர்தல் செலவினம் தொடர்பில் சட்டத்தில் திருத்தம் : குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் - இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 7 முடிவுகள் - News View

About Us

Add+Banner

Tuesday, June 13, 2023

demo-image

பாண் கட்டளைச் சட்டம் இரத்து : தேர்தல் செலவினம் தொடர்பில் சட்டத்தில் திருத்தம் : குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் - இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 7 முடிவுகள்

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
01. 1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பாண் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்தல்

பாண் விற்பனையை ஒழுங்குபடுத்தல் மற்றும் விற்பனை செய்யப்படும் பாண்களுக்கு பழுதடைந்த மாவு கலக்கப்படுவதைத் தடுப்பதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பாண் கட்டளைச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது குறித்த கட்டளைச் சட்டத்தின் ஒருசில ஏற்பாடுகளுடன் பிரச்சினைகள் எழுகின்ற சந்தர்ப்பங்கள் இருப்பதால், குறித்த கட்டளைச் சட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இல்லையெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குதற்காக வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறை செயல் தடுப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைச் செயல் தடுப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2018.03.06 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அங்கீகாரத்தின் பிரகாரம் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குடும்ப வன்முறை செயல் தடுப்பு (திருத்தச்) சட்டமூலத்திற்கு சட்ட மாஅதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. 2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம், உள்ளூர் அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

2023 ஆம் ஆண்டின 03 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகள் வலுவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூர் அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்திற்கான இடைநேர் விளைவான கருமங்களுக்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த திருத்தங்களை மேற்கொள்வதற்காக 2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்

தேர்தலொன்றின் போது போட்டியிடுகின்ற அரசியற் கட்சிகள்/ சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் ஒழுக்கநெறிக் கோவை (Code of Conduct) மீறப்படும் போது ஏற்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் தினத்தன்று குறித்த வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாததென விசேடமாக அடையாளங் காணப்பட்ட வாக்காளர்களுக்காக விசேட வாக்கெடுப்பு நிலையத்தை அமைப்பதற்காக 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2022.12.12 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தலொன்றிற்கான பெயர்குறித்த நியமன அறிவித்தல் வெளியிடப்படுகின்ற தினத்திலிருந்து ஊடக வழிகாட்டிகள் (Media Guideline) மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச்சட்டம், ஜனாதிபதி தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம், பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம் மற்றும் மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் போன்றவற்றைத் திருத்தம் செய்வதற்காக 2022.12.12 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட திருத்தங்களை உள்ளடக்கி குறித்த தேர்தல் சட்டங்களை தனித்தனியாக திருத்தம் செய்வதற்குப் பதிலாக தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் எனும் பெயரிலான புதிய சட்டமொன்றைத் அறிமுகப்படுத்துதல் பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த திருத்தங்களை உள்ளடக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. பொருளாதார மறுமலர்ச்சிக்காக சுற்றுலாத்துறையை மேம்படுத்தல்

பொருளாதார மறுமலர்ச்சிக்காக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தற்போது காணப்படுகின்ற தடைகள் மற்றும் வாய்ப்புக்களை அடையாளங் கண்டு, குறித்த தடைகளை அகற்றி, நிலவுகின்ற வாய்ப்புக்களைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய படிமுறைகள் பற்றி அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்களின் தலைமையிலும், மேலும் ஆறு (06) அமைச்சர்களின் பங்கேற்புடன் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு 2022.08.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த அமைச்சரவை உபகுழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 25 பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கையை சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் அவர்கள் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார். குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

06. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள்

இலங்கை மத்திய வங்கியின் பரிந்துரைகளுக்கமைய ஏதேனும் மூலதனக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நடப்புப் பரிமாற்றல்களுக்குரிய வெளிமுகப் பணவனுப்பல்கள் 2020 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்துவதற்கும்/ மட்டுப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிகள் சட்டத்தின் கீழ் அடிக்கடி கட்டளைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அது தொடர்பாக இறுதியாக 2022.12.22 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள் 2023.06.30 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயசபையின் பரிந்துரைக்கமைய குறித்த கட்டளைகளை மேலும் 06 மாதகாலத்திற்கு நடைமுறைப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளுக்கமைய அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் குறித்த கட்டளைகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் தொடர்பான இறுதி நிலைப்பாட்டு அறிக்கையைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க அரச நிதி முகாமைத்துவப் (பொறுப்புச்) சட்டத்தின் 13 ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளுக்கமைய, நிதி விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அவர்கள் வரவு செலவுத்திட்டம் தொடர்பான இறுதி நிலைப்பாட்டு அறிக்கையை குறித்த நிதியாண்டு முடிவடைவதிலிருந்து ஐந்து மாதங்களுக்கு (05) பிந்தாமல் பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கும், பின்னர் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

அதற்கமைய, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பற்றிய இறுதி நிலைப்பாட்டு அறிக்கை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *