ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 22ஆம் திகதி நடத்த பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானீ ரோஹணதீர தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றம் ஜூன் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்குக் கூடுகிறது. அன்றையதினம் பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகம் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நடைபெறவுள்ளது.
அத்துடன் மாலை 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் தரப்பினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.
மறுநாள் 21ஆம் திகதி ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு ஆகியவை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளன.
மாலை 5.30 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளது.
ஜூன் 22 ஆம் திகதி வியாழக்கிழமை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஜனாதிபதியினால் 2023.06.01 அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
அத்துடன் ஜூன் 23 வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான லெரீன் பெரேரா, ரெஜினோல்ட் குரே, புத்திக குருகுலரத்ன, முத்து சிவலிங்கம் ஆகியோர் குறித்த அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment