புலம்பெயர் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையருக்கான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து, இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையரின் தேவைக்கேற்ப, நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், கிராமப்புற தனிநபர் வீட்டுத் தொகுதிகளாகவும் இந்த வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் . இது தவிர சொந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கும் இதன் கீழ் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
இதற்கான நிதிப் பங்களிப்பை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (16) நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தெனுகா விதானகமவுடன் நடைபெற்றது.
எதிர்வரும் திங்கட்கிழமை புலம்பெயர் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் தொடர்பான கணக்கெடுப்பை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்குள் இந்த தகவல்கள் கிடைகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சகல பிராந்திய செயலகங்கள், தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாகவும் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களூடாக கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், கட்டப்படும் வீடுகளின் வகைகள், வீடுகளின் எண்ணிக்கை மற்றும் வீடுகள் கட்டப்படும் பகுதிகள் அடையாளம் காணப்படவுள்ளன.
அதன் பின்னர் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கும் அரசாங்கத்துக்கும் சொந்தமான காணிகளை பயன்படுத்தி வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இக்கலந்துரையாடலில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஹில்மி அஸீஸ், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment