முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அழிக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) விசேட அறிவிப்புக்களை அறிவிக்கும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 40 ஆவது உறுப்புரையின் அத்தியாயம், பாராளுமன்ற நிலையியல் கட்டளை 7 பிரிவின் விதிவிதானங்கள் மற்றும் பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் 1981 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு விசேட விதிவிதானங்களை பின்பற்றி 2022.07.20 ஆம் திகதி பராளுமன்றத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்புக்கான அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் ஜனாதிபதி தெரிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் 18 ஆவது உறுப்புரையின் பிரகாரம் மற்றும் 2023.03.24 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவுக் குழுவின் அனுமதிக்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அழிக்கப்பட்டது என்றார்.
2022 ஜுலை 09 ஆம் திகதி இடம்பெற்ற மாபெரும் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை வெளிநாட்டில் இருந்தவாறு ஜுலை மாதம் 14 ஆம் திகதி சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்கத்தின் சிறப்பு ஏற்பாடுகளுக்கு அமைய பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யும் பணிகளை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலராக இருந்து முன்னெடுத்தார்.
இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கு ஆளும் தரப்பின் வேட்பாளராக பதில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக டலஸ் அழகபெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்கள்.
இடைக்கால ஜனாதிபதி தெரிவு சிறப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியை தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பு 2022.07.20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது 223 வாக்குகள் அளிக்கப்பட்டன அவற்றில் 219 வாக்குகள் செல்லுபடியானது, 4 வாக்குகள் செல்லுபடியற்றது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்தார்.
இரகசிய வாக்கெடுப்பில் ஆளும் தரப்பின் வேட்பாளரான பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளையும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் டலஸ் அழகபெரும 82 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் 3 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கமைய நாட்டின் 8 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வாறான பின்னணியில் அளிக்கப்பட்ட இரகசிய வாக்குச் சீட்டுக்கள் இடைக்கால ஜனாதிபதி தெரிவு சட்டத்தின் சிறப்பு சட்டத்தின் 18 ஆவது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அழிக்கப்பட்டது.
No comments:
Post a Comment