காசாவில் உதவி விநியோகத் தளங்கள் உட்பட பல இடங்களிலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நேற்றும் பலர் கொல்லப்பட்ட நிலையில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 55 ஆயிரத்தைத் தாண்டி அதிகரித்துள்ளது.
காசா போருக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியை சந்தித்து வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசு, பாராளுமன்றத்தைக் கலைக்கும் எதிர்க்கட்சியின் முயற்சியில் இருந்து தப்பியுள்ளது.
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி கூட்டணி அரசை கலைக்கும் முயற்சியாகவே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நேற்று இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 103 பேர் கொல்லப்பட்டு மேலும் 427 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
அதிலும் நேற்று அதிகாலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
அதிலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு உதவி விநியோக இடங்களில் உதவிக்காக திரண்டு வரும் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியப் படை தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் நேற்று (12) மேலும் 18 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 294 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
மத்திய காசாவில் உள்ள நெட்சரிம் சோதனைச்சாவடிக்கு அருகே உதவி விநியோக இடத்தில் கூடி இருந்த பலஸ்தீனர்கள் மீதே இஸ்ரேலிய படை சூடு நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டு 200 பேர் வரை காயமடைந்திருப்பதாக காசாவின் அல் அவ்தா மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதே இடத்தில் இஸ்ரேலியப் படை நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 25இற்கு அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் காசா நகரில் வட மேற்கே மனிதாபிமான உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசாவுக்கான உணவு, மருந்து என அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் கடந்த மார்ச் 2 ஆம் திகதி தொடக்கம் முடக்கி உள்ளது. இந்நிலையில் ஐ.நா. மற்றும் பிரதான தொண்டு அமைப்புகளுக்கு மாற்றாகவே அமெரிக்க ஆதரவில் காசா மனிதாபிமான நிறுவனம் என்ற அமைப்பினால் உதவி விநியோகங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த உதவி விநியோகங்கள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் அங்கு உதவி பெற வரும் ஆயிரக்கணக்கானவர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 245 ஆக அதிகரித்திருப்பதோடு 2,145 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 55,207 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 127,821 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாரதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிகமாகும்.
காசா போர் இஸ்ரேல் அரசியலிலும் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் இஸ்ரேலிய பாராளுமன்றத்தை கலைக்கும் தீர்மானம் ஒன்றை எதிர்கட்சியினர் நேற்று (12) பாராளுமன்றத்தில் கொண்டுவந்தனர்.
120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றமான நெசட்டில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 53 வாக்குகள் பதிவான நிலையில் தீவிர வலதுசாரி கூட்டணியான ஆளுங்கட்சி இதற்கு எதிரான 61 வாக்குகளை பதிவு செய்தது.
இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாக மைய மற்றும் வலதுசாரி குழுக்கள், தீவிர பழைமைவாத கட்சிகளைக் கொண்ட எதிர்க்கட்சிகள் வாக்குறுதி அளித்திருந்தன. எனினும் பெரும்பாலான தீவிர பழைமைவாத எம்.பிக்கள் இந்த தீர்மானத்திற்கு முழு ஆதரவு அளிக்க தவறியுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் இவ்வாறான முயற்சியில் ஈடுபட எதிர்க்கட்சிக்கு இன்னும் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டி ஏற்படும்.
நெதன்யாகுவின் கூட்டணி அரசு இஸ்ரேலிய வரலாற்றில் தோன்றிய மிக தீவிர வலதுசாரி அரசாக பார்க்கப்படுகிறது. இதில் உள்ளடங்கி இருக்கும் இரு தீவிர பழைமைவாத கட்சிகளான ஷாஸ் மற்றும் ஐக்கிய தோரா யூதம் ஆகியவை ஆரம்பத்தில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment