திருகோணாமலையில் இராணுவதளம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார்.
இது முழுமையான முட்டாள்த்தனம் என பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எங்கும் எவரும் இராணுவத் தளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை ஆனால் அதன் அர்த்தம் நாங்கள் தனிமையில் வாழ முடியும் என்பதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது நீண்ட காலமாக தொடரும் ஒன்று. இது அமெரிக்காவுடன் மாத்திரமானதல்ல என தெரிவித்துள்ள அலி சப்ரி இந்தியா, சீனா, ஜப்பானுடனும் நீண்ட கால பாதுகாப்பு உறவுகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் போர்க் கலங்கள் வருகின்றன கூட்டு ஒத்திகைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது புதிய ஒழுங்குமுறையின் ஒரு பகுதி அனைவரும் இதனை அறிந்து கொண்டுள்ளனர் உணர்ந்து கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அதற்கு அப்பால் பல விடயங்கள் குறித்த கருத்துபரிமாற்றத்திற்கான வலையமைப்பை கொண்டிருப்பது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களே உதவின என்பது எங்களிற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லைகளை கடந்து நாங்கள் எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்பட்டிருக்காவிட்டால் எங்களால் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என தெரிவித்துள்ள அலி சப்ரி இவ்வாறான செயற்பாட்டின் மூலம் எங்களால் விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகத்தை முடக்க முடிந்தது. அவர்களின் நிதி திரட்டும் நடவடிக்கைகளை முடக்கினோம் சர்வதேச அளவில் அவர்களை தடை செய்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் சரியாக நினைவில் வைத்திருப்பீர்கள் என்றால் விடுதலைப் புலிகளின் 9 ஆயுதக் கப்பல்களை இலங்கை கடற்படை அழித்தது இது எங்களது புலனாய்வு பிரிவினர் அமெரிக்க புலனாய்வு பிரிவினருடன் ஒத்துழைத்ததன் காரணமாகவே சாத்தியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment