திறைசேரியின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தேர்தலை மேலும் தாமதப்படுத்தும் - எம்.ஏ.சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 5, 2023

திறைசேரியின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தேர்தலை மேலும் தாமதப்படுத்தும் - எம்.ஏ.சுமந்திரன்

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு, திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தேர்தல் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுப்பதை மேலும் தாமதப்படுத்தும். எதிர்வரும் மார்ச் மாதம் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் வாக்கெடுப்புக்கான புதிய திகதி அறிவிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடையுத்தரவு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி விடுவிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்குவதில் இருந்து திறைசேரி விலகக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அரச அச்சக திணைக்களத்துக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்துக்கு வாக்குறுதி வழங்கியது. தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திறைசேரியின் செயலாளர், அரசாங்க அச்சக திணைக்களம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. அதனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, திறைசேரியின் செயலாளர், அரச அச்சக திணைக்கள தலைவர் ஆகியோருக்கு எதிராக கட்டளை பிறப்பிக்குமாறு ஆணைக்குழு உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதியை விடுவிப்பதை தடுக்கும் செயற்பாடுகளுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆகவே, தேசிய தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் திகதியினை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும். தேர்தலை நடத்தும் திகதி எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முற்பட்டதாக அமைய வேண்டும்.

திறைசேரியின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் வாக்கெடுப்புக்கான புதிய திகதியை அறிவிப்போம் என குறிப்பிடுவது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து தாமதப்படுத்தும் ஒரு செயற்பாடாக அமையும் என கருதுகிறோம்.

ஆகவே, இந்த சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் உயர் நீதிமன்றத்தின் கட்டளைக்கமைய அனைவரும் செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment