இம்மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி : இலங்கை இந்தியாவுக்கு நன்றியுள்ள நாடாக இருக்கிறது - அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Sunday, March 5, 2023

இம்மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி : இலங்கை இந்தியாவுக்கு நன்றியுள்ள நாடாக இருக்கிறது - அமைச்சர் அலி சப்ரி

இம்மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்தினை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு உதவுவதற்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுடில்லிக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள அவர் ரைசினா கலந்துரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்துகொண்டார். இதன்போது, காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரான பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் நெறிப்படுத்திய கலந்துரையாடலொன்றில் பங்கேற்றார். அதில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்த நிலையில் இந்தியா தனது அயலுறவுக்கு முதன்மை தானம் வழங்கி உதவிக்கரம் நீட்டியிருந்தது.

குறிப்பாக, இலங்கையை மோசமான நிலைமைக்குள் சிக்கவைக்காமல் மீட்டெடுப்பதற்கும் சுமுகமான நிலைப்படுத்தலொன்றை பின்னரான காலங்களில் முன்னெடுத்து வருவதற்கும் மிகப்பெரிய பங்காளியாக இந்தியா உள்ளது.

கொரோனா பரவல் மற்றும் அதற்குப் பின்னரான காலத்தில் இந்தியா, இலங்கைக்கு தொடர்ச்சியாக பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

இந்தியா இதுவரை வழங்கியுள்ள உதவிகளை பொறுத்த வரையில் ஏனைய எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து கூட செய்யவில்லை என்றே நான் நினைக்கின்றேன்.

அதன் அடிப்படையில் இந்தியா 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் வரியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. எனவே, இலங்கை இந்தியாவுக்கு மிகவும் நன்றியுள்ள நாடாக இருக்கிறது.

அத்துடன், இலங்கை மீட்சிப்பாதையில் பயணிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை எதிர்பார்த்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை பெறுவதற்கு இந்தியாவும் முக்கிய பங்கை வகிக்கின்ற நாடாக உள்ளது.

அந்த வகையில் இந்த மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதிய உதவித்திட்டம் எமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment