உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணை நேற்றுமுன்தினம் நடைபெற்றவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதிவாதி கூண்டில் ஏற மறுத்த சம்பவத்தை கொழும்பு, கோட்டை நீதவான் திலின கமகே கண்டித்துள்ளார்.
இதனையடுத்தே அவர் பிரதிவாதி கூண்டில் ஏறியுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதிவாதி கூண்டில் ஏறாது, அதற்கு வெளியே நின்றதை அவதானித்த முறைப்பாட்டு தரப்பு சட்டத்தரணி ரியென்சி ஹர்சகுலரத்ன நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தமது கட்சிக்காரர் சார்பில் தொடரப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டுக்கமைய எதிர்கால செயற்பாடுகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளதென தெரிவித்தார்.
எனவே, அவர் கூண்டில் ஏற வேண்டிய அவசியமில்லை என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன மீதான வழக்கு நடவடிக்கைகளை தற்காலிகமாக முன்கொண்டு செல்வதில்லையென அறிவித்துள்ள போதும், பிரதிவாதி, கூண்டில் ஏற வேண்டியதில்லையென எந்த இடத்திலும் கூறவில்லையென்று கொழும்பு - கோட்டை நீதவான் திலின கமகே குறிப்பிட்டார்.
இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி சாட்சிகூண்டில் ஏறியுள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் மார்ச் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment