13 இனங்களை பிளவுப்படுத்துமே தவிர நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது - இலங்கை கம்யூனிஸ்ட கட்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

13 இனங்களை பிளவுப்படுத்துமே தவிர நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது - இலங்கை கம்யூனிஸ்ட கட்சி

(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இனவாதம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினால் மீண்டும் தலைத்தூக்கிவிடுமா என்ற அச்சம் காணப்படுகிறது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இனங்களை பிளவுப்படுத்துமே தவிர நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என இலங்கை கம்யூனிஸ்ட கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

மஹகர பகுதியில் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்ததை அமுல்படுத்தினால் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிவார்.

1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்துடன் 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நாட்டில் அழிவுகள் தோற்றம் பெற்றன.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்பதால் 1987 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த அரச தலைவர்கள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இனப் பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும்.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும், அதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம். நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க தயாராக இருந்தேன். ஆனால் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடையாக இருந்தார்கள் என்ற நிலைப்பாட்டை தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவிக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக தோற்றம் பெற்ற அரகலய நாட்டில் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. தற்போது 13 ஆவது திருத்தம் மீண்டும் இனவாத முரண்பாடுகளை சமூகத்தின் மத்தியில் தோற்றுவிக்குமா என்ற அச்சம் காணப்படுகிறது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நாட்டில் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்குமே தவிர, தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தாது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதே தனது பொறுப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மிகுதியாக இருக்கும் பதவிக் காலத்தில் இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்காமல் இருந்தால் அவர் கௌரமான முறையில் பதவியில் இருந்து ஓய்வு பெறலாம் என்றார்.

No comments:

Post a Comment