வீட்டுக் காவலில் தடுத்து வைக்கும் வகையில் புதிய சட்டம் : ஒரு சில அரசியல்வாதிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள் உதவி - அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 28, 2022

வீட்டுக் காவலில் தடுத்து வைக்கும் வகையில் புதிய சட்டம் : ஒரு சில அரசியல்வாதிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள் உதவி - அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்

(எம்.ஆர்.எம்.வசீம்)

சிறு குற்றங்கள் தொடர்பான சந்தேகநபர்களை சிறைப்படுத்துவதற்கு பதிலாக அவர்களின் பெற்றோர் அல்லது வேறு பொறுப்பாளர்களின் கீழ் வீட்டுக் காவலில் தடுத்து வைப்பதற்கு தேவையான சட்டம் கொண்டுவர நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இவ்வாறான சந்தேகநபர்கள் சிறைச்சாலைக்குள் பல்வேறு நபர்களுடன் பழகி, மோசமான குற்றவாளிகளாக மாறி சமூகமயமாவதாக தகவல் வெளியாகி இருப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றோம் என நீதி, சிறைச்சாலை நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களின் படைப்பாற்றல்களை வெளிப்படுத்தும் முகமாக பத்தரமுல்லை தியத்த உயனவில் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சிறு குற்றங்கள் தொடர்பான சந்தேகநபர்களை சிறைப்படுத்துவதற்கு பதிலாக அவர்களின் பெற்றோர் அல்லது வேறு பொறுப்பாளர்களின் கீழ் வீட்டுக் காவலில் வைப்பதற்கு முடியுமான சட்டம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான சட்டம் கொண்டுவரந்த பின்னர், நீதிமன்றத்துக்கு ஆஜர்ப்படுத்தப்படும் இவ்வாறான சந்தேகநபர்களை சிறைப்படுத்தாமல் 3, 4 மாதங்கள் அல்லது அதற்கும் அதிக காலம் பெற்றோர்கள் உட்பட பொறுப்பாளர்களின் கீழ் வீட்டுக் காவலில் தடுத்து வைப்பதற்கு உத்தரவிடுவதற்கு நீதிபதிகளுக்கு முடியுமாகின்றது.

இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு தேவையான சட்ட மறுசீரமைப்பு மேற்கொள்வதற்காக சட்டத்தரணிகள் சங்கம் உட்டப சம்பந்தப்பட்ட சட்ட நிபுணர்களுடன் கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் உட்பட முதற்தடவையாக சிறு குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள் இவ்வாறு பொறுப்பாளிகளுக்கு கீழ் வீட்டுக் காவலில் தடுத்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் நூற்றுக்கு 85 வீதம் போதைப் பொருளுடன் தொடர்பான கைதிகள் என்பதுடன் அந்த எண்ணிக்கையில் நூற்றுக்கு 95 வீதம் பாேதைப் பொருளுக்கு அடிமையானவர்களாகும்.

இலங்கைக்குள் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக பாரியளவில் பாேதைப் பொருள் கொண்டுவருபவர்கள் மற்றும் விநியோகிப்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும்.

நாட்டுக்குள் போதைப் பொருள் இந்தளவு தூரம் விரிவடைவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் ஒரு சில உயர் பொலிஸ் அதிகாரிகளின் உதவி கிடைத்திருக்கின்றது.

மேலும் குற்றவாளிகளாக சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் தொடர்பாக தகவல்கள் சேர்ப்பதற்கு பல குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களில் இருக்கும் நோய்வாய்ப்பட்டவர்கள், வயது முதிந்தவர்கள் மற்றும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகள் இனம் காணப்பட்டு, சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டிருக்கும் விசேட குழுவின் பரிந்துரைக்கமைய எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பில் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment