தினேஷ் ஷாப்டரின் கொலை குறித்த மர்ம முடிச்சுக்கள் தொடர்கின்றன ! மாமியாரிடம் சிறப்பு விசாரணை - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 28, 2022

தினேஷ் ஷாப்டரின் கொலை குறித்த மர்ம முடிச்சுக்கள் தொடர்கின்றன ! மாமியாரிடம் சிறப்பு விசாரணை

(எம்.எப்.எம்.பஸீர்)

படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், விசாரணைகளை முன்னெடுக்கும் 8 சிறப்புக் குழுவின் விசாரணையாளர்களையும் புதன்கிழமை (28) பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன கலந்துரையாடலொன்றுக்கு அழைத்துள்ளார்.

சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறும் நிலையில், விசாரணைகளுக்கான ஒத்தாசைகளை வழங்கி வரும் சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வுப் பிரிவையும் உள்ளடக்கிய 8 குழுக்களையும் பொலிஸ்மா அதிபர் அழைத்துள்ளார்.

இதன்போது, விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதனிடையே, தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில் இதுவரை 84 பேரின் வாக்குமூலங்களை விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

இதில் தினேஷ் ஷாப்டரின் மாமியார், மனைவி ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். செவ்வாய்க்கிழமை (27) தினேஷ் ஷாப்டரின் மாமியாரிடம் சி.ஐ.டி.யினர் சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஷாப்டர் தனது மனைவியின் தாயாருக்கு, மனைவியின் குண நலன்களை வர்ணித்து நன்றி கூறி எழுதிய கடிதம் ஒன்றும், அதனை ஒத்த குறுஞ்செய்தி ஒன்று தொடர்பிலும், கடந்த 24 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருந்த நிலையில் அதனை மையப்படுத்தி குறித்த விசாரணைகள் மிக நீண்ட நேரம் நடாத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.

இதனைவிட மனைவி டானி ஷனின் ஷாப்டரிடம் சி.ஐ.டி. குழுவினர், அவர்களது வாழ்க்கை மற்றும் கருத்து வேறுபாடுகள், எதிரிகள் உள்ளிட்ட விடயங்களையும் வர்த்தக நடவடிக்கை மற்றும் முதலீடு குறித்த விடயங்களையும் மையப்படுத்தி 3 முறை விசாரணை நடாத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், சிஐடி வசம் உள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், தினேஷ் ஷாப்டர் மூச்சு திணறல் காரணமாகவே உயிரிழந்ததாக சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அப்பிரேத பரிசோதனை அறிக்கையின் விரிவான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் வீட்டை விட்டு வெளியேறிய 30 முதல் 40 நிமிடங்களுக்குள் கோமா நிலையை அடைந்தார் என சந்தேகிக்கப்படுகின்றது.

தனது கணவர் பிற்பகல் 1.55 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாக தினேஷ் ஷாப்டரின் மனைவி பொரளை பொலிஸில் தெரிவித்துள்ள நிலையில் சி.சி.ரி.வி. காணொளிகள் பிரகாரம் பிற்பகல் 2.06 மணிக்கு தினேஷ் ஷாப்டரின் கார் பிளவர் வீதி வீட்டிலிருந்து பிரதான பாதைக்குள் நுழைவது துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி , தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 2.35 மணி முதல் 2.40 மணிக்குள் குற்றமொன்றுக்கு உள்ளாகி கோமா நிலையை அடைந்திருக்கலாம் என விசாரணையாளர்கள் அனுமானிக்கின்றனர்.

அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கபப்டும் போதும், கோமா நிலையில் இருந்தமை தொடர்பிலும், அவரது இருதயத்தை செயற்படுத்த பல மணி நேரம் வைத்தியர்கள் போராடியமை உள்ளிட்ட தகவல்களையும் மையப்படுத்தி இந்த அனுமானம் பெறப்பட்டுள்ளது.

இருப்பினும், முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸ், தனக்கு அன்றையதினம் பிற்பகல் 2.42 மற்றும் 2.43 க்கு இடையில் தினேஷ் ஷாப்டரிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி வந்ததாகவும் அது ஷாப்டரின் மொழிப் பிரயோகத்தை ஒத்திருக்கவில்லை எனவும் வாக்கு மூலமளித்துள்ளார். இதனால் தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டதாக எழும் சந்தேகம் வலுத்துள்ளது.

எவ்வாறாயினும் இதுவரையிலான விசாரணைகளில், ஷாப்டரின் மரணம் குறித்த மர்ம முடிச்சுக்களை சி.ஐ.டி.யினரால் அவிழ்க்க முடியவில்லை.

அதன்படி இந்த சம்பவத்தை படுகொலையாக கருதி சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்த்துவ குறிப்பிட்டார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மிக ஆழமான விசாரணைகள் நடாத்தப்பட்டு வரும் நிலையில், ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவருவதாகவும் உறுதி செய்யப்படாத மூலங்கள் ஊடாக வெளியிடப்படும் செய்திகள் விசாரணைகளை பாதிப்பதாக அமைவதாகவும் பொலிஸ் பேச்சாளர் அறிக்கையொன்றினை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையில் முக்கிய திருப்பங்களை பொலிஸ் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் எனவும் உறுதிசெய்யப்படாத தகவல்களை வெளியிட்டு விசாரணைகளுக்கு பங்கம் ஏற்படுத்த வேண்டாம் எனவும் அது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் எனவும் அவர் குறித்த அறிக்கை ஊடாக ஊடகங்களிடம் விடயங்களை முன் வைத்துள்ளார்.

No comments:

Post a Comment