மின் கட்டணத்தை அதிகரித்தால் மக்களை ஒன்றிணைத்து வீதிக்கு இறக்குவோம் : இராணுவத்தை கொண்டு அரசாங்கம் துண்டித்துக் கொள்ளட்டும் - மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 28, 2022

மின் கட்டணத்தை அதிகரித்தால் மக்களை ஒன்றிணைத்து வீதிக்கு இறக்குவோம் : இராணுவத்தை கொண்டு அரசாங்கம் துண்டித்துக் கொள்ளட்டும் - மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

மின் கட்டணத்தை 4 ஆம் திகதி அதிகரித்தால் அரசாங்கத்திற்கு எதிராக பல இலட்சம் மக்களை ஒன்றிணைத்து வீதிக்கு இறக்குவோம். மின் கட்டணத்தை செலுத்த முடியாதவர்களின் மின் விநியோகத்தை துண்டிக்கும் சேவையில் இருந்து விலகியுள்ளோம். இராணுவத்தை கொண்டு அரசாங்கம் மின்சாரத்தை துண்டித்துக் கொள்ளட்டும் என மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மக்கள் மீது கொண்டுள்ள வெறுப்பை மின் கட்டண அதிகரிப்பு ஊடாக தீர்த்துக் கொள்கிறார். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் பெரும்பாலானோர் தமது பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மின்சார சபையின் நட்டத்திற்கு நாட்டு மக்கள் பொறுப்புக்கூற வேண்டிய தேவை கிடையாது. மின்சார சபையின் சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதால் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளது என அரசாங்கம் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையை கருத்திற் கொண்டு இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் பல உரிமைகளை விட்டுக் கொடுத்துள்ளார்கள்.

அடுத்த மாதம் 04ஆம் திகதி மின் கட்டணத்தை நிச்சயம் அதிகரிப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தான்தோன்றித்தனமாக குறிப்பிட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தற்போதைய மின் கட்டண அதிகரிப்பை 74 இலட்சம் மின் பாவனையாளர்களினால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் மீண்டும் மின் கட்டண அதிகரிப்பை மக்கள் எவ்வாறு தாங்கிக் கொள்வார்கள்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கவில்லை மாறாக மக்களிடம் மிகுதியாக இருப்பதையும் பறித்துக் கொள்கிறது.

அமைச்சர் குறிப்பிட்டதை போன்று எதிர்வரும் 04 ஆம் திகதி மின் கட்டணத்தை அதிகரித்தால் பல இலட்சம் மக்களை ஒன்று திரட்டி அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறக்குவோம். அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படும் தரப்பினர் தொடர்ந்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டு வீடுகளில் இருக்கட்டும்.

மின்சார கட்டணத்தை செலுத்தாத தரப்பினரது மின் விநியோகத்தை துண்டிக்கும் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளோம். உணவு தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மின் விநியோகத்தை எங்களால் துண்டிக்க முடியாது. இராணுவத்தை கொண்டு அரசாங்கம் அந்த சேவையை செய்து கொள்ளட்டும் என்றார்.

No comments:

Post a Comment