தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் சீர் செய்யப்பட வேண்டும் : இலங்கை தமிழரசு கட்சியின் கிளைக் கூட்டத்தில் தீர்மானம் ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 2, 2022

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் சீர் செய்யப்பட வேண்டும் : இலங்கை தமிழரசு கட்சியின் கிளைக் கூட்டத்தில் தீர்மானம் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் சீர் செய்யப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நல்லூர்த் தொகுதிக் கிளைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற குறித்த கூட்டம் தொடர்பில் நல்லூர் தொகுதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர்த் தொகுதிக் கிளையின் பொதுச் சபைக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூர்த் தொகுதிக் கிளைக் காரியாலயத்தில், அதன் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விசேட அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா கலந்து கொண்டார்.

தொகுதிக் கிளையின் புதிய நிர்வாக சபைக்கான தெரிவு கட்சியின் நிர்வாகச் செயலாளர் ஆ.சே.குலநாயகத்தினால் நடாத்தப்பட்டது.

இதன்போது தலைவராக சீ.வீ.கே.சிவஞானம் உப தலைவராக பெ.கனகசபாபதி, செயலாளராக இராசதேவன், உப செயலாளராக பத்மராஜா, பொருளாளராக தியாகமூர்த்தி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். தெடர்ந்து நிர்வாக சபை உறுப்பினர்களாக வசந்தகுமார், இராசசேகரம் தெரிவு செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது தொகுதிக் கிளைத் தெரிவு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலின் முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் எனவும் அதற்கு உள் முரண்பாடுகளை சீர்செய்ய வேண்டுமெனவும் தீர்மானம் மேற்கொண்டதுடன் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளும், பொது விடயங்களில் இணைந்து செயல்படுதல் வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் அரசியல் தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகள், அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் அபகரிப்பு போன்ற விடயங்களில் ஜனாதிபதியுடன் பேச வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தவரை 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னரான எட்டு வருட காலத்தில் 2019 இல் மாத்திரம் ஒரு மகாநாடு நடாத்தப்பட்டது.

எனவே கடந்த மத்திய செயற்குழுவில் தெரிவித்தபடி இந்த வருட முடிவுக்குள் கட்சியின் மாகாநாடு நடாத்தப்பட வேண்டும் எனவும் ஏனைய தொகுதிக் கிளைத் தெரிவுகள் துரிதமாக நடாத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் கட்சியின் மத்திய குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றுள்ளது.

No comments:

Post a Comment