நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களிடமிருந்து கட்டணம் அறவிடும் முறையை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக மருத்துவமனை ஆரம்பித்துள்ளது.
நோயாளியுடன் தங்கியிருப்பவர்களிடமிருந்து 350 ரூபாயை அறவிடும் நடைமுறையை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக மருத்துவமனை ஆரம்பித்துள்ளது.
இதனை உறுதி செய்துள்ள மருத்துவமனையின் மருத்துவ விநியோகத்திற்கான இயக்குநர் வைத்தியர் சமன் திலகரட்ண தற்போதைய நிதி நெருக்கடிகள் காரணமாக ஏற்பட்ட பராமரிப்பு நஷ்டத்தினை ஈடுசெய்வதற்காக இந்த திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் வாழ்க்கை செலவு மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக மக்கள் மருத்துவ சிகிச்சைகளை கைவிடும் நிலை காணப்படுகின்ற சூழலில் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி சிகிச்சை முறை அறிமுகமாக உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த தகவலும் வெளியாகியுள்ளது.
350 ரூபாய் கட்டணத்தை உணவிற்கான கட்டணத்துடன் சேர்க்கவில்லை என தெரிவித்துள்ள சமன் திலகரட்ண நோயாளிகளுடன் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மின்சாரம் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். நஷ்டத்தினை ஈடு செய்வதற்காக நாங்கள் இந்த கட்டணத்தை அறவிடுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை 3165 மில்லியன் கடனை செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுகின்றது.
மாதாந்த மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் 19 மில்லியனாக காணப்பட்ட மின் கட்டணம் தற்போது 30 மில்லியனாக அதிகரித்துள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருந்துகளை மாத்திரம் சுகாதார அமைச்சு வழங்குகின்றது. அனைத்து செலவுகளையும் பாதுகாப்பு அமைச்சே வழங்குகின்றது. நிதி அமைச்சு அதிக வருமானத்தை உழைக்குமாறு கேட்டுக் கொண்டது. நிர்வாகம் நோயாளிகளிடமிருந்து பணத்தை அறவிடுமாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிட்ட மருத்துவமனை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
வீரகேசரி
No comments:
Post a Comment