(இராஜதுரை ஹஷான்)
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி மக்கள் போராட்டத்திற்கு எதிரான அடக்குமுறையை அரசாங்கம் பிரயோகிக்கிறது. மக்களின் பலத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்களை தடுப்பதற்காகவே எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுவது நகைப்புக்குரியது.
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் நாட்டு மக்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாக்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதியை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்தியுள்ளது. பிரதான நிலை கடன் மறுசீரமைப்பு ஜனவரி மாதம் வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மக்கள் போராட்டத்தை தடுப்பதற்காக அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஊரடங்குச் சட்டம், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்தல், ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறையை நிறுத்தல் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து நாட்டு மக்கள் தற்போது போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி மக்கள் போராட்டத்தை அரசாங்கம் முடக்குகிறது. மக்களாணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் பலத்தை வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார். இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.
No comments:
Post a Comment