இலங்கையை வந்தடைந்தது அமெரிக்காவின் அன்பளிப்பு கப்பல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 2, 2022

இலங்கையை வந்தடைந்தது அமெரிக்காவின் அன்பளிப்பு கப்பல்

(எம்.மனோசித்ரா)

அமெரிக்காவின் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டக்லஸ் மொன்ரோ பி.627 கப்பல் இன்று புதன்கிழமை (2) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கடந்த செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி அமெரிக்காவின் சியடெல் துறைமுகத்திலிருந்து குறித்த கப்பல் இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்திருந்தது.

கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி இந்தக் கப்பலை உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு கையளிக்கும் நிகழ்வு, அமெரிக்காவின் சியடெல் துறைமுகத்தில் இடம்பெற்றது.

கடல் பிராந்தியங்களில் சமுத்திர சவால்களை வெற்றி கொள்வதற்கான ஒற்றுமையை பலப்படுத்துவதற்காகவும், அதனை மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மூன்றாவது கப்பல் இதுவாகும்.

115 மீற்றர் நீளம் கொண்ட இக்கப்பலின் அதிகபட்ச வேகம் மணித்தியாலத்துக்கு 29 கடல் மைல்களாகும். அத்தோடு சுமார் 14 கடல் மைல் தொலைவுக்கு கண்காணிப்புக்களை மேற்கொள்ளக் கூடிய வசதிகளும் குறித்த கப்பலில் காணப்படுகின்றன.

அதற்கமைய இன்றையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பல், இலங்கை கடற்படையின் கலாசாரத்துக்கமைய வரவேற்கப்பட்டது.

இந்நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவிநிலை தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இதற்கு முன்னர் கடந்த 2005ஆம் ஆண்டு 'சுமுதுரு' மற்றும் 2018ஆம் ஆண்டு 'கஜபாஹூ' என்ற இரு கப்பல்களையும், அமெரிக்கா இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment