(நா.தனுஜா)
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிராகப் பதிவாகியுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் யுனிசெப் அமைப்பு, சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து யுனிசெப் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அண்மையில் இலங்கையில் சிறுவர்களுக்கு எதிராகப் பதிவான வன்முறைகள் தொடர்பில் வெளியான செய்திகள் குறித்து நாம் மிகுந்த விசனமடைகின்றோம்.
கடந்த வாரம் 10 வயது சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகிப் பலியான சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதன் பின்னர் சில தினங்களில் சிறுவரொருவர் பொலிஸ் அதிகாரியால் சுடப்பட்டு தீவிர காயங்களுக்கு உள்ளான சம்பவமொன்று பதிவாகியிருந்தது.
சிறுவர்களுக்கு எதிராக எந்தவொரு வடிவத்திலேனும் நிகழ்த்தப்படும் வன்முறையை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. எனவே சிறுவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளை நாம் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.
சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள், சமூகம் மற்றும் அரச கட்டமைப்புக்கள் உள்ளடங்கலாக அனைத்துத் தரப்பினருக்கும் இருக்கின்றது.
அதேவேளை சிறுவர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட ரீதியான நடவடிக்கைகளைப் பாராட்டுகின்றோம்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்தல் உள்ளடங்கலாக இதில் பொதுமக்கள் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றனர்.
அதன்படி சிறுவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து எவரேனும் அறிந்திருந்தால், அவர்கள் அதுபற்றி 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாரிடம் முறைப்பாடளிக்க முடியும்.
அதேவேளை தேசிய ரீதியான சட்டங்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனம் ஆகியவற்றுக்கு அமைவாக சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment