நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் அரசாங்கத்தின் பிழையான வரி நிவாரணங்களே - கபீர் ஹாசிம் - News View

About Us

Add+Banner

Tuesday, October 4, 2022

demo-image

நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் அரசாங்கத்தின் பிழையான வரி நிவாரணங்களே - கபீர் ஹாசிம்

21-61909654a0d2e
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் முதலீடு செய்யும் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், எந்த அடிப்படையில் வரி நிவாரணம் வழங்குவதென்று பாராளுமன்றத்துக்கு தெரியாது. நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம், அரசாங்கத்தின் பிழையான வரி நிவாரணங்களாகும். அத்துடன் இந்தியாவின் எஸ்.சி.எல். நிறுவனத்துக்கு 17 வருடங்களுக்கு வரி நிவாரணம் வழங்குவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஒக் 4) இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மூலோபாய அபிவிருத்தி வேலைத்திட்ட நிவாரணத்தின் கீழ் அரசாங்கம் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி நிவாரணம் வழங்கி இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. ஆனால், இந்த வரி நிவாரணங்களை எந்த அடிப்படையில் வழங்கி இருக்கிறது என்பது பாராளுமன்றத்துக்கு தெரியாது. நாட்டின் வருமானத்துக்கு வரி முக்கியமாகும். தற்போது நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதற்கு காரணம், வரி இல்லாமல் செய்ததாகும்.

அத்துடன் அரசாங்கம் மூலோபாய அபிவிருத்தி வேலைத்திட்ட நிவாரணத்தின் கீழ் இந்தியாவை அடிப்படையாக கொண்ட எஸ்.சி.எல்., நிறுவனத்துக்கு வரி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இது தகவல் தொழில்நுட்ப சேவை மேற்கொள்ளும் நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் எமது நாட்டில் 10 மில்லியன் டொலர் முதலீடு செய்கின்றது. இந்த நிறுவனத்தில் 700 பேர் வரை பணி புரிகின்றனர். அவர்கள் அனைவரும் இலங்கையர்கள். அந்த நிறுவனம் பணிக்கு இணைத்துக் கொள்ளும்போது ஊழியர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகின்றது. இவ்வாறான நிறுவனங்களுக்கு வரி நிவாரணம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

அத்துடன் எஸ்.சி.எல்., நிறுவனம் என்பது சர்வதேச ரீதியில் இயங்கும் நிறுவனமாகும். இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் வருமானம், இந்தியாவில் கடந்த வருடம் 169 பில்லியனாகும்.

இந்த நிறுவனம் தனது வருமானத்தில் 34 பில்லியனை வரியாக செலுத்தி இருக்கின்றது. அவ்வாறான இந்த நிறுவனத்தின் கிளைக்கே இலங்கையில் 17 வருடங்களுக்கு வரி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த நிறுவனத்துக்கு உதவி செய்ய வேண்டும். அதற்காக பூரண காலத்துக்கு நிவாரணம் வழங்கினால், நாட்டுக்கு கிடைக்கும் வருமானம்தான் என்ன? இதுதானா அரசாங்கத்தின் வரிக் கொள்கை?

எனவே, அரசாங்கம் மூலோபாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வரி நிவாரணம் வழங்குவதற்கு முறையான திட்டம் அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பூரண வரி நிவாரணம் வழங்கினால், அரசாங்கத்துக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை.

அத்துடன் வரி நிவாரணத்தை மாத்திரம் கவனத்திற் கொண்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவதில்லை. மாறாக, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை, நீதிமன்ற சுயாதீனம், முதலீட்டாளர்களின் பாதுகாப்பு போன்ற விடயங்களையே பார்க்கின்றனர். இதனை அரசாங்கம் சரி செய்யவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *