காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் பெண்கள் சிறுவர்களிற்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு குறித்தும் இந்த சம்பவங்களின் போது பெற்றோர் பிள்ளைகளை மனித கேடயங்களாக பயன்படுத்தினர் என தெரிவிக்கப்படுவது குறித்தும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயத்திற்கு இரு பக்கங்கள் உள்ளன, ஒன்று பிள்ளைகளுடன் பெற்றோர் காணப்படும்போது பொலிஸார் நடவடிக்கை எடுப்பது மற்றையது பெற்றோர் பிள்ளைகளை ஆபத்திற்கு உட்படுத்துவது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தந்தையை பொலிஸார் இழுத்துச் சென்றவேளை ஒரு வயது பிள்ளை துன்புறுத்தப்பட்டதாக ஆசிரியர் சங்கத்திடமிருந்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை சம்பவத்தை தொடர்ந்து ஒரு பிள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த பிள்ளைக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை என லேடி ரிஜ்வே மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
எனினும் பதற்றமான நிலைமை காணப்படும் இடங்களிற்கு பிள்ளைகளை கொண்டு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment