(எம்.மனோசித்ரா)
நாட்டுக்கு வெவ்வேறு இராஜதந்திரிகள் விஜயம் செய்கின்றமை தொடர்பில் வீண் அச்சமடையத் தேவையில்லை. இலங்கை ஒரு சுயாதீன அரசு என்ற ரீதியில் ஏனைய அரசுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய தேவை கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது, எரிக் சோல்ஹைம்மின் விஜயம் புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், வெவ்வேறு இராஜதந்திர நபர்கள் நாட்டுக்கு விஜயம் செய்கின்றமை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நாம் அனைத்து நாடுகளுடனும் பிரிவினையற்ற வெளியுறவுக் கொள்கையின் ஊடாக பயணிப்பதற்காகவே செயற்படுகின்றோம்.
சுயாதீன அரசு என்ற ரீதியில் நாம் ஏனைய அரசாங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டியேற்படாது என்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சோல்ஹைம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்.
இந்தியாவின் சென்னை நகரிலிருந்து அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். எரிக் சோல்ஹைம், கடந்த யுத்த காலத்தின்போது நோர்வேயின் அமைதிக்கான பிரதிநிதியாக இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment