(எம்.எப்.எம்.பஸீர்)
சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கெளரி சங்கரி தவராசா, இன மத பேதங்களைக் கடந்து, சிவில் உரிமைகளை பாதுகாப்பதற்காக போராடிய ஒரு தேசிய கதாநாயகி என உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துறைராஜா தெரிவித்தார்.
சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்றுமுன்தினம் (1) வெள்ளவத்தை - குளோபல் டவர்ஸ் ஹோட்டலில் நடந்தது. இதன்போது கெளரி சங்கரி தவராசாவின் கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய 'கெளரி - நீதிக்கான குரல்' எனும் புத்தகமும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நீதியரசர் எஸ். துறை ராஜா இதனை வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நீதியர்சர் எஸ். துறைராஜா தெரிவித்ததாவது, 'நான் கெளரி அக்கா என்றே அவரை அழைப்பேன். சட்டக்கல்லூரி நாட்களில் இருந்து எனக்கு அவரை தெரியும். அமரர் கெளரி சங்கரி தவராசாவினால் இன்று நாம் உயிர் வாழ்கின்றோம் என கூறும் பலர் உலகெங்கும் வாழ்கின்றனர்.
உள்நாட்டு யுத்த கால கட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பலரை, குற்றமற்ற அப்பாவிகள் என நிரூபித்து மறுவாழ்வு அளித்தவர் கெளரி தவராசா. குரலற்றவர்களின் குரலாக இருந்த அவர், தேவை உள்ள மக்களின் தேவையை அறிந்து உதவும் மனப்பாங்கினை கொண்டிருந்தார்.
தனக்கு தீங்கு செய்வோரைக்கூட ஒரு புன்னையால் கடந்து செல்லும் மனப்பாங்கு கொண்ட அவர், பலரின் வாழ்வைப் பாதுகாத்தவர்.' என தெரிவித்தார்.
No comments:
Post a Comment