நான் எமது நாட்டு மக்களுக்காகவே குரல் கொடுக்கின்றேன் வன்முறை அரசியலுக்கு அல்ல பிரதமர் இதற்குரிய தெளிவூட்டலை வழங்க வேண்டும். என் மீதான உங்களின் பிழையான புரிதல் எனது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் கருத்து மோதல் இடம்பெற்றது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 22 மே மாதம் 20 அன்று, எனது சமீபத்திய நாடாளுமன்ற உரை குறித்த ஓர் தெளிவுபடுத்துதலின் கட்டாயம் எனக்குள்ளது. அதனடிப்படியில் நான் வன்முறையைத் தூண்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கைகளில் நான் ஒருபோதும் ஈடுபடவும் இல்லை ஆதரிக்கவுமில்லை மற்றும் ஊக்குவிக்கவும் இல்லை என்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
3 தசாப்தங்களுக்கு மேல் பல விதமான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள ஓர் சமூகத்தை நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போதிலும், சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியதாக அனைத்து இலங்கையர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக நான் குரல் கொடுத்து வருகிறேன்.
நாம் பல சமூக பிளவுபடுவதை விட ஒன்றாக இருப்பதில் இலங்கையர்களின் பன்முகத்தன்மையே எங்களின் பலமாக இருக்க வேண்டும் என்பதில் எனது கருத்துக்களில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
மே 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் குறைகள், தேவைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக உணர்ந்ததால்தான், மக்கள் வன்முறையான முறையில் எதிர்வினையாற்றினார்கள் எஎன்று உரைத்திருந்தேன்.
தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுக்கு வாக்களித்த மக்களின் நலனைப் பாதுகாப்பதில் தங்கள் கட்டாயக் கடமைகளில் இருந்து தவறிவிட்டதாக அவர்கள் ஒருவேளை உணர்ந்திருக்கலாம். என்னுடைய இந்தக் கூற்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுள்ளது. எனவே, இதன் காரணமாகவே அவர்களுக்கு எனது நிலைப்பாட்டை விளக்குவது எனது தார்மீகக் கடமை என்று உணர்கின்றேன்.
அந்த வகையில், எனது அறிக்கைகளின் உண்மைத் தன்மையை பிரதமர் சரிபார்த்து, இது தொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியும், இது போன்ற ஒரு மிகத் தீவிரமான அறிக்கை, அது நாட்டின் பிரதமரிடமிருந்தும், குறிப்பாக உங்கள் அந்தஸ்துள்ள ஒருவரிடமிருந்தும் வெளிப்படும்போது, பொதுமக்கள் அதை சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை என்று கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள முடியும். இது எனது நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் அதே வேளையில் எனது உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையும்.
இந்த நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் முன்னுரிமையும் காலத்தின் தேவையும், இந்த நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதும், மூன்று வேளை உணவையும் உறுதிப்படுத்துவதும், அவர்களை இந்த துயரத்திலிருந்து விடுவிப்பதும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நாட்டு மக்களுக்கு ஆறுதல் அளிக்கும், அவர்களுக்கு உடனடி மற்றும் நிலையான நிவாரணம் அளிக்கும், அவர்களின் தற்போதைய குறைகள் மற்றும் எதிர்கால நல்வாழ்வுக்காக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் நான் என்றும் ஆதரிப்பேன் என இரா.சாணக்கியன் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அமரகீர்த்தி அத்துகோரளவுக்கான இரங்கல் விவாதத்தின் போது, நாட்டுக்கு பாதகமான விடயங்களுக்கு ஆதரவாக வாக்களித்தமையினாலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக சாணக்கியன் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் கண்டனம் தெரிவித்தார்.
ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறிய பிரதமர், இந்த கருத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், பின்னர் பநாடாளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன், பிரதமர் சபைக்கு தவறான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment