(எம்.மனோசித்ரா)
நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை பாராளுமன்ற அமர்வுகளை நடத்தாமலிருப்பதே சிறந்தது. கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை. எனவே இவ்வாறு அமர்வுகளை நடத்துவதும் மக்களின் பணத்தை வீண் விரயமாக்கும் செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் திங்கட்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காகவே கடந்த வாரம் பாராளுமன்றம் கூட்டப்பட்டது. எனினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முரண்பட்டுக் கொண்டனரே தவிர பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை.
இவ்வாறு எவ்வித பிரயோசனமும் இன்றி பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுமாயின் மக்களின் கோபம் மேலும் தீவிரமடையும். எனவே அவர்களின் பணத்தை தொடர்ந்தும் வீண் விரயம் செய்யாது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை பாராளுமன்ற அமர்வுகளை நடத்தாமல் இருப்பதே சிறந்தது.
பிரதமர் பதவி விலக மறுக்கும் பட்சத்தில் அவரை பதவி விலக்கும் அதிகாரம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. எனவே அவர் நினைத்தால் பிரதமரை பதவி விலக்க முடியும். அவ்வாறன்றி குடும்ப பிரச்சினைகளுக்காக எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமலிருந்தால் அதனால் நாட்டுக்கு எவ்வித பயனும் இல்லை.
மேலும் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் விரைவாக சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். இதன் ஊடாக ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தை முற்றாகக் குறைத்து சர்வ கட்சி உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சபையின் ஆலோசனைக்கு அமைய செயற்படும் நிலைக்கு தள்ள வேண்டும். அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது மிகக் கடினமாகும்.
இவற்றுக்கு அப்பால் பிரதமர் பதவி விலகி, அந்த பதவிக்கு மீண்டும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவாராயின் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு நாம் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்றார்.
No comments:
Post a Comment