(எம்.மனோசித்ரா)
மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் அலரி மாளிகை வளாகத்தில் ஏற்பாடு செய்ததைப் போன்ற ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட செயற்பாடுகள், நாட்டை வன்முறையான சூழலுக்கு கொண்டு செல்லும். எனவே யதார்த்தத்தை புரிந்து கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும். அவ்வாறில்லை எனில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஆதரவை வழங்கி ஜனாதிபதியை பதவி விலகச் செய்வோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
புதிய பிரதமர் தலைமையிலான சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி சாதகமானதொரு பிரதிபலிப்பினை காண்பித்துள்ளது. தற்போது தேர்தலை நடத்தக் கூடிய சூழல் நாட்டில் இன்மையால், மக்கள் விடுதலை முன்னணியும் விரைவில் சாதகமான பதிலை வழங்க வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டார்.
கொழும்பிலுள்ள சு.க. தலைமையகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்குமாறு ஒரு வருட காலத்திற்கு முன்னரே அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம். எனினும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. மிகவும் காலம் கடந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறிருப்பினும் தற்போது அனைத்தும் கையை மீறிச் சென்றுள்ளன. அடுத்த மாதமளவில் உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்படும்.
எனவேதான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகி புதிய பிரதமர் தலைமையில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வ கட்சி இடைக்கால அரசாங்கமொன்றை அமைத்து, நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சாதகமானதொரு பிரதிபலிப்பை வழங்கியுள்ளது. அதேபோன்று ஜே.வி.பி.யும் சாதகமான பதிலை வழங்க வேண்டும். காரணம் அவர்கள் கோருவதைப் போன்று தற்போது தேர்தலை நடத்த முடியாது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவில்லை எனில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஆதரவை வழங்கி பிரதமரை பதவி விலகச் செய்வோம். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்.
அரசாங்கம் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் அலரி மாளிகை வளாகத்தில் ஏற்பாடு செய்ததைப் போன்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தால் நாடு வன்முறையான நிலைமைக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அரசியல் நெருக்கடிகளுக்கு துரித தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment