ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறைகூவல் - News View

About Us

About Us

Breaking

Friday, May 20, 2022

ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறைகூவல்

மக்களின் நீதியான உரிமைப் போராட்டத்தில் ஆகுதியான அனைத்து விடுதலை இயக்க போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் அனைத்து மக்களும் நினைவு கூர்வது பற்றிய தனது எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வகையில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நினவைுகூரலை சுட்டிக்காட்டியதுடன், அனைவரும் இணைந்து பொருளாதார நெருக்கடிகளை வெற்றி கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.

நாடாளுமன்றில் (19.04.2022) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், "இலங்கை - இந்திய ஒப்பந்த நடைமுறைகளை சரியான திசைவழி நோக்கி நகர்த்தி செல்லும் உரிமை எமக்கு அன்று வன்முறை செயற்பாடுகளால் மறுக்கப்பட்டிருந்தாலும் - அந்த ஒப்பந்த நடைமுறைகளில் நாம் பங்கெடுக்காது போயிருந்தாலும், அன்றிலிருந்து வன்முறை வழிமுறையின் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியாது என்பதை எமது கட்டாய கட்டளைகளாக நாம் ஏற்றுக் கொண்டவர்கள்.

சாதாரண மக்களின் உணர்வுகளை நான் என்றும் மதிப்பவன். அமைதி வழியில் போராடும் சுதந்திரம் எவருக்கும் உண்டு. ஆனாலும் வன்முறைகள் எந்த வடிவத்தில் யாரால் முன்னெடுக்கப்பட்டாலும் அவைகள் குறித்து நான் விமர்சனங்களை முன்வைப்பவன்.

அண்மையில் நடந்த வன்முறைகளின் போது கொல்லப்பட்ட சிங்கள சகோதர மனித உயிர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். தாக்கப்பட்டு, காயப்பட்டு, உடமைகளை இழந்தும் இருப்போருக்கும் ஆறுதல் கூறுகின்றேன்.

இதேவேளை, எமது மக்களின் நீதியான உரிமைப்போராட்டத்தில் ஆகுதியான அனைத்து விடுதலை இயக்க போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்துகின்றேன்.

தமிழ் மக்களின் உரிமைப் போரின் பெயரால் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளின் போதும், மாறி மாறி நடந்த இனக் கலவரங்களின் போதும் மரணித்த அனைத்து உயிர்களையும் நினைவு கூருகின்றேன்.

யுத்தத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது எமது மக்களின் ஜனநாயக உரிமை. அதை நான் ஒருபோதும் மறுத்ததில்லை. ஆனாலும் இறந்த மனித உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்று கூறிக்கொண்டு, எமது மக்களின் அழிவுகளை வைத்து அதில் அரசியல் பிழைப்பு நடத்துவதை நான் ஒரு போதும் ஏற்கப்போவதில்லை.

யுத்தத்தில் இறந்த சகல மக்களையும் நினைவு கூருவதற்கும் அவர்களின் மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை 2016 ஆம் ஆண்டு இந்த உயரிய சபையில் தனிநபர் பிரேரணையாக நான் கொண்டு வந்திருந்தேன்.

துரதிஸ்டவசமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போது ஓடி ஔித்து விட்டார்கள். ஆனால் அதிஸ்டவசமாக தென்னிஙலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த தனிநபர் பிரேரணையை நிறைவேற்றித் தந்திருந்தார்கள்.

அவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், என்னுடைய அந்த விருப்பத்தினை பிரதிபலிக்கும் வகையில், இறுதி யுத்தத்தில் சகல மக்களையும் சகல மக்களும் நினைவுகூரும் வகையில் காலிமுகத் திடலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கும் என்னுடைய மரியாதையைப் பதிவு செய்கின்றேன் அழிவு யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கண்ணீருக்கும் பரிகாரம் தேடுவோம்.

ஆகுதியான அனைத்து மக்களையும் நெஞ்சில் நினைவேந்தி அழகார்ந்த சமத்துவ தேசத்தை உருவாக்குவோம்" என்று தெரிவித்தள்ளார். 

மேலும், அரசியல் மக்களை பிரிக்கிறது, பொருளாதாரம் மக்களை ஒன்றிணைக்கிறது. இன்று நாம் எதிர் கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் இலங்கை தீவில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைய வைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா எம்.பி, இத்தகைய இடர்காலச் சூழலில் இருந்து அனைத்து இன மத சமூக மக்களும் மீண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment