திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 10 க்கும் மேற்பட்டவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (20) தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, சட்ட விரோத குடியேற்றம் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர்.
இந்நிலையில், சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் எப்ஸிபன், கன்பூசியஸ், ரெஜிபன், ப்ரணவன், சவுந்தரராஜன் 10 க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், ''தங்கள் மீதான வழக்குகள் முடிந்தும், 3 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்துள்ளனர்.
சட்டப்படி எங்களை விடுதலை செய்ய வேண்டும். அதுவரை உண்ணாநிலை அறப்போராட்டத்தை தொடர்வோம்.
இப்போது 10 க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மற்றவர்களும் பங்கேற்கும் தொடர் போராட்டத்தை நடத்த உள்ளோம்'' என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment