(எம்.எப்.எம்.பஸீர்)
இன்று (30) கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல யூடியூபரும், சமூக செயற்பாட்டாளருமான ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த 25ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கொம்பனித் தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் 8 பேரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகிறது.
காலி முகத்திடலில் இடம்பெறும் கோட்டா கோ கம எனும் அமைதி போராட்டத்தில் ரட்டா முக்கிய நபராக திகழும் நிலையில், தொடர்ச்சியாக அவர் அங்கு போராட்டங்களில் பங்கேற்று வருகின்ரார்.
இந்நிலையில் இன்று (30) மாலை கொம்பனித் தெரு பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவரை கோட்டை நீதிவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிஸார் ஆஜர் செய்தனர்.
இதன்போது ரட்டாவுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான சட்டத்தரணிகளான நுவன் போப்பகே மற்றும் கெளசல்ய நவரத்ன ஆகியோர் ஆஜராகினர்.
இதன்போது நீதிவானிடம் விடயங்களை முன்வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், சந்தேகநபரான தனது சேவை பெறுநருக்கு எதிரான குற்ரச்சாட்டுக்கள் பொலிஸ் பிணை வழங்க முடியுமானவை என குறிப்பிட்டார்.
அவ்வாறு இருக்கையில், எந்த சாட்சி சுருக்க அறிக்கைகளும் இன்றி, இரவோடிரவாக அவரை நீதிவானின் வீட்டுக்கு அழைத்து வந்து ஆஜர் செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் பொலிஸார், பொலிஸ் நிலையம் முன்பு பெருமளவானவர்கள் திரண்டதால், பாதுகாப்புக்காக அவரை நீதிவான் முன் ஆஜர் செய்ததாக கூறினர்.
இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிவான், பொலிஸில் கையெழுத்திட்ட பின்னர் பிணையில் செல்லசந்தேக நபரை அனுமதித்ததுடன் வழக்கை எதிர்வரும் ஜூன் 13 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்தி வைத்தார்.
No comments:
Post a Comment