ஹட்டன் சிங்கமலை பகுதயில் உள்ள நீர்த் தேக்கத்தில் தவறி விழுந்த மாணவன் இன்று (09) நீர்த் தேக்கத்தில் இருந்து கடற்படையினரின் உதவியோடு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த் தேக்கத்தில் 17 வயது மாணவன் நேற்று மாலை மூழ்கி காணமல் போயிருந்தார்.
இந்த ஆண்டு O/L பரீட்சையை முடித்துவிட்டு, முடிவுகளுக்காக காத்திருக்கும் 6 மாணவர்கள், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த் தேக்கத்தின் புகைப்படம் எடுக்க சென்றனர். அவர்களில் ஒருவர் சிங்கமலை நீர்த் தேக்கத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்கும் 17 வயது தமிழ் மாறன் என்ற மாணவன், நேற்று மாலை 5.00 மணியளவில் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த பிறகு, நீர்த் தேக்கத்தின் ஓரத்தில் உள்ள பாறையில் ஏறி விழுந்து காணாமல் போயுள்ளார்.
இந்த 6 மாணவர்களும் ஹட்டன் பகுதியில் உள்ள பல்வேறு பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் என்றும், தமிழ் மாறன் என்ற மாணவர் அட்டை கடிக்கு உள்ளானதால் காலில் காயம் ஏற்பட்டதாகவும், இரத்தத்தை கழுவ நீர்த் தேக்கத்தில் இருந்த பாறையில் ஏறி இரத்தத்தை கழுவி கொண்டிருந்த வேலையில் அம்மாணவன் நீர்த் தேக்கதில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போன மாணவரின் உடலைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டதால் ஹட்டன் நகருக்கு முக்கியமாக நீர் வழங்கும் சிங்கமலை நீர்த் தேக்கத்திற்கான நீர் விநியோகம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் நீர் வழங்கல் பிரிவு தற்போது தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த பகுதிக்கு இரானுவத்தினர் வரவழைக்கப்பட்டதோடு நீர்த் தேக்கத்தில் காணாமல்போன மாணவனை தேடும் பணிக்காக கொழும்பில் இருந்து கடற்படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டபோதே குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக ஹட்டன் நீதவான் முன்னிலையில் மரண விசாரனைகளை இடம்பெற்றவுடன் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment