அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமனறில் தெரிவித்தார்.
இன்றையதினம் (20) இடம்பெற்று வரும் பாராளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தில் இணைந்து கொள்வது ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கை அல்ல. நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு, அரசாங்கத்தின் நல்ல தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்தோம். இது தொடர்பில் எழுத்து மூலம் அரசாங்கத்துக்கு தெரிவித்திருக்கின்றோம்.
அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் வைத்தியசாலைகளுக்கான மூச்சு வேலைத்திட்டம் ஊடாக வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாகி வரும் அத்தியாவசிய இரண்டு பொருட்களை பெற்றுக் கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சபையில் அறிவித்திருந்தார்.
அத்துடன் ஏற்கனவே இந்த வேலைத்திட்டம் மூலம் நாட்டின் பல வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுத்து வருகின்றோம்.
என்றாலும் தற்போது எமது கட்சியில் இருந்து சிலரை பெற்றுக் கொண்டு அமைச்சு பதவி வழங்கி இருக்கின்றது. இவ்வாறு கட்சியில் இருந்து சென்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம் என்றார்.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும், மனூஷ நாணயக்கார, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் இன்றையதினம் (20) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment