மே 09 வன்முறைகள் தொடர்பில் மற்றொரு சந்தேகநபர் கைது : நாமல் ராஜபக்ஸவிடம் CID வாக்குமூலம் பதிவு - News View

About Us

About Us

Breaking

Friday, May 20, 2022

மே 09 வன்முறைகள் தொடர்பில் மற்றொரு சந்தேகநபர் கைது : நாமல் ராஜபக்ஸவிடம் CID வாக்குமூலம் பதிவு

(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக் காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 ஆவது சந்தேகநபராக, மிஷன் வீதி, எத்துல் கோட்டே பகுதியைச் சேர்ந்த 43 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோகந்தர பகுதியில் வைத்து, சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினர் அவரைக் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (21) நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று ( 20) விஷேட விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கடந்த 09 ஆம் திகதி “மைனா கோ கம” மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் “கோட்டா கோ கம” வில் இடம்பெற்ற அமைதிப் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இந்த விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளது.

சி.ஐ.டி.யின் அறிவுறுத்தல் பிரகாரம் இன்று ( 20) மாலை 4.00 மணிக்கு சி.ஐ.டி.யில் பிரசன்னமான நாமல் ராஜபக்ஷவிடம் சில மணி நேரங்கள் அவ்விசாரணைகள் நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment