(எம்.எப்.எம்.பஸீர்)
மின்சாரம், சமயல் எரிவாயு, பால்மா, மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள இரு அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (4)அறிவித்தது.
மனுதாரர்களான இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.ஜி. அருள் பிரகாசத்தின் ஆலோசனைக்கு அமைய ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே. கனக ஈஸ்வரன், உதித்த இகலஹேவா சட்டத்தரணிகளான சுரேன் ஞானராஜா, புலஸ்தி ஹேவமான்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் மற்றும் பிரதிவாதிகளுக்காக ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே ஆகியோரின் வாதங்களைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்மானித்தது.
அதன்படி எதிர்வரும் 8 ஆம் திகதி மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொல்வதாக அறிவித்த உயர் நீதிமன்றம், அன்றையதினம் மனுவின் பிரதிவாதிகளான பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் அடங்களாக 42 பேரையும் மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க அறிவித்தல் பிறப்பித்தது.
நீதியரசர் கமினி அமரசேகர தலைமையிலான குமுதினி விக்ர்மசிங்க மற்றும் ஷிரான் குனரட்ன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டபோது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
எஸ்.சி.எப்.ஆர். 106/ 22 மற்றும் எஸ்.சி.எப்.ஆர். 107 /22 ஆகிய இலக்கங்களின் கீழ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் இந்த இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அதன் உப தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, செயலாளர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, பொருளாலர் சட்டத்தரணி ரஜித்த பெரேரா, பிரதி செயலர் சட்டத்தரணி பசிந்து சில்வா ஆகியோரால் இந்த இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களிலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள், திறை சேரியின் செயலர், மத்திய வங்கி ஆளுநர், மத்திய வங்கியின் நிதிச் சபை, இலங்கை மின்சார சபை, கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், சட்ட மா அதிபர் உள்ளிட்ட 42 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் மனுதாரர்களுக்காக மன்றில் சட்டத்தரணிகள், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையால் ஏற்பட்டுள்ள சட்ட ஆட்சி மீதான தாக்கங்கள் மற்றும் ஏனைய விடயங்களை மன்றுக்கு விளக்கி மனுவை விசாரணைக்கு ஏற்று பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறு கோரினர்.
தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களும், வர்த்தகர்களும் மிகப்பெரும் நெருக்குதல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இதன்போது மன்றில் வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா, 'கனம் நீதியரசர்களே, கடந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் பல ஆர்ப்பாட்டங்கள் பதிவாகின. அதனூடக அராஜக நிலைமையும் உருவாகி வருகிறது.
வரலாற்றில் முதன் முறையாக பொதுமக்கள் ஊரடங்குச் சட்டத்தையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலைமையை அவதனித்தோம். இதனூடாக சட்டத்தின் மீதான ஆட்சி மிக பாரதூரமான அளவில் சவாலுக்கு உட்பட்டுள்ளது.
அரசாங்கத்திடம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை இன்மையால் சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்களை முன்னெடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
நாட்டில் சட்டத்தின் மீதான ஆட்சி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்து வருகின்றமை அவதனைக்கப்பட்ட பின்னரே இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அரசியலமைப்பு ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் இறையாண்மை மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் புனிதமான பொறுப்பு இந்த நீதிமன்றுக்கு உள்ளது' என வாதிட்டார்.
இதனையடுத்து சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, எந்தவொரு நபரின் அடிப்படை உரிமையினையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பில்லை என தெரிவித்தார்.
'கனம் நீதியரசர்களே, அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபர் எந்த சந்தர்ப்பத்திலும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. அதற்கு சட்டமா அதிபர் உதவுவார். இந்த வழக்கிலும் மன்றுக்கு உதவுவதற்காகவே நான் ஆஜராகின்றேன்.
எவ்வாறாயினும் நீதிமன்றம், அரசியலமைப்பு ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள் இருந்தே செயற்பட வேண்டும். எனது வாதத்தில் அந்த அதிகார எல்லைகள் தொடர்பில் மன்றுக்கு விடயங்களை முன் வைக்க நான் முயற்சிக்கிறேன்.
இந்த மனுக்கள் ஊடாக கோரப்பட்டுள்ள நிவாரணங்கள் வழங்கும் அதிகாரம் நிறைவேற்றதிகார தரப்புக்கே உள்ளது. அமைச்சரவைக்கு கொள்கை வகுக்கும் பொறுப்பு உள்ளது. அமைச்சரவை, பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும். எனவே இந்த மனுக்கள் ஊடாக கோரும் நிவாரணங்களை வழங்க நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ளதா என்பது ஆரயப்பட வேண்டிய விடயமாகும்' என மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே வாதிட்டார்.
அதற்கு பதிலளித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகல் குழாமின் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேஷ் ஞானராஜா, நிறைவேற்றதிகார தரப்பு தயாரிக்கும் கொள்கைகள் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என பரிசீலுக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றுக்குரியது என சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்த உயர் நீதிமன்றம் அரசியலமைப்பின் 11,12 (1),13 (4), மற்றும் 14 (1)(எ)(ஏ) மற்றும் 14 (அ) ஆகிய உறுப்புரைகளை கவனத்தில் கொண்டு விசாரணைக்கு உட்படுத்த தீர்மானிப்பதாக அறிவித்தது.
முன்னதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள இரு மனுக்களிலும், கணிய எண்ணெய், மின்சாரம், சமயல் எரிவாயு, உணவு, மருந்து, பால்மா உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டும் மனுதாரர்கள், அதனால் மக்கள் மிகப் பெரும் பாதிப்புக்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதனால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்களான இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதனால் மக்களுக்கு அத்தியவசியமான பொருட்களாக கருதப்படும் உணவு, சமயல் எரிவாயு, பால்மா, மின்சாரம், மருந்துகள் போன்றவற்றை தட்டுப்பாடின்றி நிவாரண விலையின் கீழ் தொடர்ச்சியாக மக்களுக்கு விநியோகிக்க முடியுமான செயற்றிட்டம் ஒன்றினை தயாரிக்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு இந்த மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.
அதேபோல், பொருளாதார நிபுணர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை சீர் செய்வதற்கான குறுகிய கால, மத்திய கால நீண்ட கால கொள்கை ரீதியிலான செயற்றிட்டம் ஒன்றினை வகுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறும் மனுக்களில் கோரப்பட்டுள்ளன.
அத்துடன் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான தேசிய கொள்கை ஒன்றினை தயாரிக்கவும் உத்தரவிடுமாறு மனுவூடாக கோரப்பட்டுள்ளது.
அதனைவிட, தேசிய விவசாயம், பால் உற்பத்தி, பன்னை உற்பத்திகளை அதிகரிக்க கொள்கை ரீதியிலான செயற்றிட்டம் ஒன்றினை வகுக்கவும் அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு மனுக்களில் கோரப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment