இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிலைய உறுப்புரிமையிலிருந்து அஜித் நிவாட் கப்ராலை நீக்குமாறு வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Monday, April 4, 2022

இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிலைய உறுப்புரிமையிலிருந்து அஜித் நிவாட் கப்ராலை நீக்குமாறு வலியுறுத்தல்

(நா.தனுஜா)

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்றைய தினம் அவரது பதவியிலிருந்து இராஜினாமா செய்திருக்கும் அதேவேளை, புதிய ஆளுநராக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்படக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதாரம் பற்றிய தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற அஜித் நிவாட் கப்ராலை இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிலையத்தின் உறுப்புரிமையிலிருந்து நீக்குமாறு நாடளாவிய ரீதியிலுள்ள பட்டயக் கணக்காளர்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக நேற்றுமுன்தினம் பிரசாரமொன்றை ஆரம்பித்திருந்தனர்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால் தொழில்முறை பட்டயக் கணக்காளர் என்பதுடன், இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிலையத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.

இருப்பினும் அவரது செயற்பாடுகள் அந்நிலையத்தின் ஒழுக்கவிதி முறைகளுக்கு உட்பட்டவையாக அமையவில்லை என்றும், பணம் அச்சிடல் மற்றும் பண வீக்கம் ஆகியவற்றுக்கு இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்பது போன்று பொருளாதாரம் தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிடுவதால் உள்நாட்டில் மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் இலங்கைப் பட்டயக் கணக்காளர்களுக்கு இருக்கும் நன்மதிப்பும் அங்கீகாரமும் சீர்குலைவதாகவும் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டியுள்ள பட்டயக் கணக்காளர்கள், எனவே அவரை இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிலையத்தின் உறுப்புரிமையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், அமைச்சரவை அமைச்சர்களின் பதவி விலகலைத் தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்திருப்பதாக நேற்றையதினம் அஜித் நிவாட் கப்ரால் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அதனை மத்திய வங்கியின் ஊடகப்பிரிவு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment