அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் : உடனடியாக நடைமுறைப்படுத்த 3 பரிந்துரைகளையும் முன்வைத்துள்ள கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Monday, April 4, 2022

அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் : உடனடியாக நடைமுறைப்படுத்த 3 பரிந்துரைகளையும் முன்வைத்துள்ள கரு ஜயசூரிய

(நா.தனுஜா)

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியின் தீவிரத்தன்மையைப் புரிந்துகொண்டு, நாட்டில் அசாதாரண சூழல் ஏற்படுவதைத் தடுப்பதற்கு உகந்தவாறான பொது இணக்கப்பாட்டிற்கு வருமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள்விடுத்திருக்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய, காபந்து அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய 3 பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கின்றார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாகவது, தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்குத் தமது அரசாங்கத்துடன் இணையுமாறு ஜனாதிபதி ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இந்த நெருக்கடியின் தீவிரத்தன்மையையும் மக்களின் கோரிக்கைகயையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் இந்த முயற்சியானது வெறுமனே அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பலனற்ற நடவடிக்கை என்றே தோன்றுகின்றது.

ஆகவே நாட்டின் பெரும்பான்மை மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு நாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியின் தீவிரத்தன்மையைப் புரிந்துகொண்டு, நாட்டில் அசாதாரண சூழல் ஏற்படுவதைத் தடுப்பதற்கு உகந்தவாறான பொது இணக்கப்பாட்டிற்கு வருமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த இணக்கப்பாடானது அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் அரசாகவோ அல்லது நாட்டிலுள்ள ஒரு சில குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்ட ஆட்சியதிகாரமாகவோ இருக்கக்கூடாது.

முதலில் நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்குத் தீர்வு கண்டு, செயற்திறனான ஆட்சியை முன்னெடுப்பதற்கு அவசியமான அடிப்படைத் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எனவே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் பங்களிப்புடனோ அல்லது இணக்கப்பாட்டின் ஊடாகவோ தற்காலிக காபந்து அரசாங்கத்தை நிறுவுவது உகந்தது என்ற பரிந்துரையை முன்வைக்கின்றோம்.

பாராளுமன்றத்தை பலவீனமடையச் செய்து தனி நபருக்கு அதிகாரங்களை வழங்கியிருக்கும் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்வது அதன் முதல் கடமையாக இருக்க வேண்டும்.

அதேபோன்று அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை நீக்கி, அதன் அடிப்படை நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்திற்குச் செல்வது பொருத்தமான நடவடிக்கையாக அமையும்.

இரண்டாவதாக கடன்களை மீளச் செலுத்துதல் தொடர்பிலான நெருக்கடிகளை கண்டறிந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச வல்லுனர்கள், நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் உதவியுடன் அவற்றுக்குத் தீர்வுகாண வேண்டும். அது குறித்து உரியவாறான செயற்திட்டத்தையும் கால அட்டவணையையும் மக்களுக்குத் தெரியப்படுத்துவது அவசியமாகும்.

மூன்றாவதாக காபந்து அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து 18 மாதங்கள் பூர்த்தியடைவதற்கு முன்னர் நாட்டின் அரசியலமைப்பில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அதன்போது மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக, இறையாண்மையையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பும் வகையிலான புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற வேண்டும்.

இவற்றைப் பூர்த்தி செய்ததன் பின்னர் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாட்டு மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி உடனடியாக தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment