(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆட்சியதிகாரத்தை வழங்க வேண்டாம் என நாட்டு மக்களிடம் 2019ஆம் ஆண்டே குறிப்பிட்டேன். எனது ஆரூடம் தற்போது உண்மையாகியுள்ளது. நாட்டு மக்கள் கோ ஹோம் கோட்டா என்ற எதிர்ப்பு பதத்துடன் கோ ஹோம் ராஜபக்ஷ என்ற பதத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இடைக்கால அரசாங்கம் என்ற ஏமாற்று செயற்பாட்டையும் மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
களுத்துறை பகுதியில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டுக்காக பொதுமக்கள் ஒன்றினைந்து வீதிக்கிறங்கியுள்ளமை மகிழ்வுக்குரியது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆட்சியதிகாரத்தை வழங்க வேண்டாம் என நான் 2019ஆம் ஆண்டு நாட்டு மக்களிடம் குறிப்பிட்டேன். எனது ஆருடம் தற்போது உண்மையாகியுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர் பதவியை கூட வகிக்காதவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது. ஆகவே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள் என நான் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டேன்.
குடும்ப அரசியலை ஸ்தாபித்துக் கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியல் மற்றும் பொது நிர்வாகம் தொடர்பில் எவ்வித அனுபவமில்லாதவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினார். அவர் செய்த தவறின் பிரதிபலனை தற்போது முழு நாடும் எதிர்கொள்கிறது.
நாட்டு மக்கள் கோ ஹோம் கோத்தா என்ற எதிர்ப்பு சொற்பதத்துடன், கோ ஹோம் ராஜபக்ஷ என்ற பதத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.குடும்ப ஆட்சி எவ்விதத்திலும் என்றாவது பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கின்றமை நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும். ஆகவே நாட்டு மக்கள் இதற்கு ஒருபோதும் ஏமாறக்கூடாது என்றார்.
No comments:
Post a Comment