மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே முதலில் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை : கேள்வி கேட்பதற்கு கூட அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்றம் இன்று கூடுகிறது - வடிவேல் சுரேஷ் - News View

About Us

About Us

Breaking

Monday, April 4, 2022

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே முதலில் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை : கேள்வி கேட்பதற்கு கூட அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்றம் இன்று கூடுகிறது - வடிவேல் சுரேஷ்

அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளிடமும் விடுத்த கோரிக்கையை தாங்கள் நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே முதலில் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையே தவிர, அமைச்சுப் பதவிகளை வழங்குவது அல்லவெனவும் அவர் தெரிவித்தார்.

''அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்குமாறு ஜனாதிபதி அழைத்ததை முழுமையாக நான் நிராகரிக்கின்றேன். ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் எதிர்பார்க்கின்றதையே நாங்கள் செயற்படுத்த வேண்டும். மக்கள் நடைமுறையிலுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்.

கேஸ், மா, எரிபொருள், மின் வெட்டு இந்த பிரச்சினை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும். இதை செய்துவிட்டுதான், பிறகு அரசியல் பேச வேண்டும். அதை செய்யாமல் அரசியல் பேசக்கூடிய காலம் இது இல்லை.

மக்கள் துயரப்படும் காலகட்டம் இது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஆதரவு கேட்டால், நாங்கள் ஆதரவு கொடுக்கலாம். எரிபொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு, மின் வெட்டை இல்லாது செய்வதற்கு ஒத்துழைப்பு கேட்டால், கொடுக்கலாம்.

அந்த மாதிரியான திட்டங்களை கொண்டு வராமல், தங்கள் அரசியலை நிலைநாட்டிக் கொள்வதற்காக அமைச்சுப் பதவிகளை கொடுப்பதை இந்த சந்தர்ப்பத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது" என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை நாடாளுமன்றம் இன்றையதினம் கூடவுள்ள நிலையில், கேள்வி கேட்பதற்கு கூட அமைச்சர்கள் இல்லாத ஒரு நாடாளுமன்றமாக இன்றைய நாடாளுமன்றம் இருக்க போகின்றது என வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பிலான விடயங்கள், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இன்று உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கேள்வி கேட்பதற்கு, புதிய நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்ட போதிலும், வழமைக்கு மாறான ஒரு அமர்வாக இன்றைய அமர்வு இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாதவாறான ஒரு நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. நான்கு அமைச்சர்களுடனான நாடாளுமன்றமாக இன்று நாடாளுமன்றம் இருக்கும் என்கின்றார் வடிவேல் சுரேஷ்.

''இது அரசியலமைப்புக்கு எதிரான விடயம். இது நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒரு விடயம். மக்கள் இன்று தீர்ப்பு சொல்லும் அளவுக்கு வந்திருக்கின்றார்கள். மக்கள் தீர்ப்புக்கு போகனும். நேற்று பதவி விலகியவர்கள் இன்று மீண்டும் அதே பதவிக்கு வந்துள்ளார்கள். நீதி அமைச்சராக நேற்று இருந்த அலி சப்ரி மாத்திரமே, நிதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இது ஒரு நகைச்சுவையாக உள்ளது. நகைச்சுவை நாடகம் என்பதே உண்மை. நாளை மாற்றம் வரும் என எதிர்பார்க்கின்றேன்" என வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment